ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவ் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
இக்கோயிலின் ரங்கா ரங்கா கோபுர நுழைவுவாயில் பகுதிக்கு வந்த அவரை, கோயில் நிர்வாகத்தின் சார்பில் எஸ். சுந்தர் பட்டர் மாலை அணிவித்தும், உதவி ஆணையர் கே.கந்தசாமி, கண்காணிப்பாளர் கே. மோகன் ஆகியோர் சால்வை அணிவித்தும் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து பேட்டரி காரில் சந்திரசேகர ராவ் ஆரியபடாள் வாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டார்.
கருடாழ்வார் சந்நிதி, மூலவர், தாயார், சக்கரத்தாழ்வார் உள்ளிட்ட சந்நிதிகளில் முதல்வர் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயிலின் சிறப்புகள் குறித்து எஸ். சுந்தர் பட்டர் விளக்கிக் கூறினார்.
தரிசனத்தின் போது கோயில் நிர்வாகம் சார்பில் மூலவர் அரங்கநாதர் படம் முதல்வருக்கு வழங்கப்பட்டது. அவருடன் கரீம்நகர் மக்களவை உறுப்பினர் வினோத்குமார், மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ்குமார் ஆகியோரும் வந்திருந்தனர். ஸ்ரீரங்கம் காவல் உதவி ஆணையர் த. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தரிசனத்தைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் சந்திரசேகரராவ் கூறியது: தரிசனம் மிகவும் திருப்திகரமாக இருந்தது. பலமுறை வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். முதல் முறையாக ஸ்ரீரங்கம் பெருமாளைத் தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.