தமிழகத்தில் புதன்கிழமை வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக 8 இடங்களில் பதிவானது. அதிகபட்சமாக, திருத்தணியில் 108 டிகிரி பதிவானது. வேலூர், மதுரை தலா 106 டிகிரி, கரூர்பரமத்தி, திருச்சியில் தலா 105 டிகிரி, சேலம் 101 டிகிரி, தொண்டி, சென்னை மீனம்பாக்கம் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது: தமிழகத்தில் சில இடங்களில் புதன்கிழமை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. ஓரிரு இடங்களில் மழையும் பெய்தது. வியாழக்கிழமை இதே நிலை தொடரும். ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசும்.
மிதமான மழை: தென் மத்திய மகாராஷ்டிரத்தில் இருந்து உள் கர்நாடகம், உள் தமிழகம் வழியாக குமரிக்கடல் வரை காணப்படும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, வெப்பச்சலனம் ஆகியவை காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, நீலகிரி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும்
என்றார் அவர்.