அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தைப் பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாகத் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசுத் தரப்பு சாட்சியங்களின் முதன்மை விசாரணையை தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மே 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர், டிடிவி தினகரன், டி.பி. மல்லிகார்ஜுனா, பி. குமார் ஆகியோருக்கு எதிராக தில்லி காவல்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவு சுமத்திய குற்றச்சாட்டுகளை தில்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் 17-இல் பதிவு செய்தது. குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்களான நத்து சிங், புல்கித் குந்த்ரா, ஜெய் விக்ரம் அரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு தில்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அருண் பரத்வாஜ் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது டிடிவி தினகரன், பி. குமார், டி.பி. மல்லிகார்ஜுனா ஆகியோர் சார்பில் வழக்குரைஞர்கள்ஆஜராகி, மூவருக்கும் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மூவருக்கும் விலக்கு அளிக்கப்பட்டது.
அரசுத் தரப்பு சாட்சியான அமரீந்தர் சிங், பஞ்சாப் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதால், அவருக்கு ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவரது சார்பில் அளிக்கப்பட்ட மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பின் நான்காவது சாட்சியமான கே. சுதாகரனிடம் நடத்தப்பட்ட முதன்மை விசாரணையின் போது, சுகேஷ் சந்திரசேகரால் பயன்படுத்தப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் அட்டை குறித்த சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அப்போது டி.பி. மல்லிகார்ஜுனா சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஆர்.கே. ஹாண்டு, டிடிவி தினகரன், பி. குமார் ஆகியோருக்கு எதிரான விசாரணைக்கு தில்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவை தடை விதித்துள்ளது. இதனால், அரசுத் தரப்பு சாட்சியங்களின் முதன்மை விசாரணை மட்டும் நடைபெறும் என்றும், இந்த சாட்சியங்களிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படும் என்றும், அது தில்லி உயர்நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவுக்குக் கட்டுப்பட்டது என்றும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த மார்ச் 23-இல் உத்தரவு பிறப்பித்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, சுகேஷ் சந்திரசேகர், டி.பி. மல்லிகார்ஜுனா ஆகியோர் சார்பிலான சாட்சியங்கள் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார்.
இதனிடையே, அரசுத் தரப்பின் ஐந்தாவது சாட்சியமான நரேந்தரிடம் முதன்மை விசாரணை நடைபெற இருந்தது. அரசுத் தரப்பின் மூன்றாவது சாட்சியமான கிரிஷ் சர்மா, தன்னை திகார் சிறையில் கடந்த ஆண்டு டிசம்பரில் சந்தித்தார் என சுகேஷ் சந்திரசேகர் தெரிவித்தார். இதையடுத்து, அரசுத் தரப்பு சாட்சியங்களின் முதன்மை விசாரணை மே 22, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும். அந்த விசாரணையின் போது அரசுத் தரப்பு வழக்குரைஞர் ஆஜராக வேண்டும். இதை உறுதி செய்யும் வகையில், இந்த உத்தரவை தில்லி தலைமைச் செயலருக்கும், பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்ற அரசுத் தலைமை வழக்குரைஞருக்கும் அளிக்க வேண்டும் என நீதிபதி அருண் பரத்வாஜ் உத்தரவிட்டார்.