
உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் தமிழக நீதிபதிகள் புறக்கணிக்கப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிப்பதற்காக உயர்நீதிமன்ற நீதிபதிகள் நால்வரின் பெயர்களை, மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன் மூலம், உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அதே நேரத்தில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்த போஸ், குவாகாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய், ஹிமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவர்களின் திறமை குறித்தோ, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்தோ யாருக்கும் எந்த ஐயமும் இல்லை.
மாறாக, இவர்களின் சொந்த உயர்நீதிமன்றங்களைச் சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கெனவே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கே உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாய்ப்பு வழங்கப்படுவதைப் பார்க்கும்போது, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது. இந்தியாவின் பெரிய உயர்நீதிமன்றங்களில் சென்னை உயர்நீதிமன்றம் மிகவும் முக்கியமானதாகும். ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை. இந்தப் போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று ராமதாஸ்
கூறியுள்ளார்.