கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை பாதத்தில் தமிழறிஞர்கள் புதன்கிழமை மலர் தூவி மரியாதை செய்தனர்.
உலகத் திருக்குறள் கூட்டமைப்பு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவர் பிறந்த 2050 ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையொட்டி, கடலில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு தனிப்படகில் சென்ற தமிழறிஞர்கள், திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் தூவி மரியாதை செய்தனர்.
இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் கூறியது: கன்னியாகுமரி கடலில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைக்க வேண்டும்.
இதற்காக, மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபடுவோம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது கன்னியாகுமரி கடற்கரையில் இருந்து 1,600 மீட்டர் தொலைவுக்கு கடலுக்குள் பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்து இரும்பு கம்பிகள் எல்லாம் இறக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது எம்எல்ஏ -ஆக இருந்த நான், கடற்கரையில் இருந்து விவேகானந்தர் மண்டபத்துக்கு பாலம் அமைத்தால் இயற்கை அழகு கெட்டுவிடும் என வலியுறுத்திப் பேசினேன். இதனை ஏற்றுக்கொண்ட எம்ஜிஆர் பாலம் அமைப்பதற்கான பணிகளை கைவிட்டார்.
தற்போது விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே நூறு மீட்டர் தொலைவுக்கு இணைப்புப் பாலம் அமைத்தால் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் திருவள்ளுவர் சிலையை எந்நேரமும் பார்வையிடலாம்.
எனவே, அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்றார் அவர். இந்நிகழ்வில், உலகத் திருக்குறள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், பொதுச்செயலர் ஆதிலிங்கம், பொருளாளர் கவிஞர் செவ்வியன், திரைப்பட இயக்குநர் வி.சேகர், குமரி வரலாற்று ஆய்வு மையத்தலைவர் எஸ்.பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.