வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளதால் திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் தாக்கல் செய்த மனு:
திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் மே 19 -ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகரித்துள்ளது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பது குறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலை நிறுத்தி வைக்க அல்லது தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.தண்டபாணி ஆகியோர் கொண்ட அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நடவடிக்கைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. தேவைப்பட்டால், மனுதாரர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம் எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.