பா.ஜ.க. அரசின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம்: வைகோ கண்டனம்

பா.ஜ.க. அரசின் கைப்பொம்மையாகச் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளா
பா.ஜ.க. அரசின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம்: வைகோ கண்டனம்

பா.ஜ.க. அரசின் கைப்பொம்மையாகச் தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
மேற்கு வங்க மாநிலத்தில் மே 14 ஆம் தேதி பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பேரணியின்போது, பா.ஜ.க.வினர் வன்முறையில் இறங்கி உள்ளனர். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை நசுக்கி விடுவோம் என்று கடந்த 5 ஆண்டுகளாகத் தொடர்ந்து பேசி வருகின்ற பா.ஜ.க. தலைவர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் கொல்கத்தா பல்கலைக் கழகம் மற்றும் வித்யாசாகர் கல்லூரி அருகில் முழக்கங்களை எழுப்பினர். இதனை சகித்துக்கொள்ள முடியாத பா.ஜ.க.வினர், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியதால் இருதரப்புக்கும் மோதல் உருவானது.

வித்யாசாகர் கல்லூரிக்கு உள்ளே நுழைந்த பா.ஜ.க. குண்டர்கள், வங்கத்து மக்கள் போற்றி வணங்கி வரும் சமூக சீர்திருத்தவாதி, தத்துவாதி, கல்வியாளர், எழுத்தாளர் போன்ற பன்முகச் சிறப்புகளைப் பெற்று, வங்க மறுமலர்ச்சிக்கு வித்திட்ட ஈஸ்வர சந்திர வித்யாசாகர் சிலையை உடைத்து நொறுக்கி இருக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சியின் பாசிச அரசியலுக்கு முடிவு கட்டுவதற்கு முனைந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான பேரன்புக்குரிய சகோதரி மம்தா பானர்ஜி, பா.ஜ.க. ஏவிவிடும் கணைகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு அடிபணியாமல் செயலாற்றி வருகிறார். மேற்கு வங்க மக்களின் பேராதரவுடன் இரண்டாம் முறையாகவும் முதல்வர் பொறுப்பை ஏற்ற மம்தா பானர்ஜியை வீழ்த்த வேண்டும் என்று நரேந்திர மோடி, அமித்ஷா இருவரும் துடிக்கிறார்கள்.

எனவேதான், வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க. திட்டமிட்டு வன்முறைகளை அரங்கேற்றி வருகிறது. பா.ஜ.க. தலைவர் அமித்ஷா மற்றும் மத்திய அமைச்சர்களின் அத்துமீறல் பேச்சுக்கள், தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்து மம்தா பானர்ஜி தேர்தல் ஆணையத்திடம் தொடர்ந்து திரும்பத் திரும்ப முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தில்லியில், பா.ஜ.க. தலைவர் நேற்று 15 ஆம் தேதி பத்திரிகையாளர்கள் சந்திப்பில், மேற்கு வங்க நிலைமை குறித்து மிரட்டல் தொனியில் கருத்துத் தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்றத் தேர்தலின் கடைசி 7 ஆவது கட்டத்தில் மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளுக்கு 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தல் பரப்புரை 17 ஆம் தேதிதான் முடிவு வரவேண்டும். ஆனால் கொல்கத்தா வன்முறையைக் காரணம் காட்டி, அங்கு நிலவும் சூழல் காரணமாக தேர்தல் பரப்புரையை ஒரு நாள் முன்னதாக இன்று மே 16 ஆம் தேதியே முடித்துக்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது தேல்தல் ஆணையத்தின் எதேச்சதிகார செயலாகும்.

மேற்கு வங்காளம் மட்டும் அல்ல, நாடு முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாகவே இருந்தன. நியாயமான, சுதந்திரமான தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்புமிக்க தேர்தல் ஆணையம் அப்பட்டமாக பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதிகார வர்க்கத்தின் கைப்பொம்மையாகச் செயல்பட்டு வருகிறது. தேர்தல் ஆணையத்தின் இத்கைய ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் குறித்து, “ஆணையம் நம்பகத் தன்மையை இழந்து வருகிறது” என்று 6 ஆம் தேதி இந்து ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோஷி என்று சுட்டிக்காட்டி உள்ளார்.

தேர்தல் ஆணையம் இறையாண்மை கொண்ட தனித்துவமான அமைப்பு என்பதையும், அதன் செயல்பாடுகளில் நீதிமன்றங்கள்கூட தலையிடக்கூடாது என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 329 இல் கூறப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி தேர்தல் பரப்புரையில் மதவாத அரசியல், இராணுவ நடவடிக்கைகள் பற்றி பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் தொடர்ந்து பேசினர்.தேர்தல் நடத்தை விதி மீறல் குறித்து, மே 6 ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏப்ரல் 15 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியும் கூட, அவர்களின் பேச்சுக்களை வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, இருவர் பேச்சிலும் விதி மீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் சான்று அளித்தது வெட்கக்கேடான நியாயப்படுத்த முடியாத செயலாகும்.

தமிழ்நாட்டிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட புகார்களை அலட்சியப்படுத்திய மாநில தேர்தல் ஆணையம், ஆளும் கட்சியினரின் அடாவடிகள், அத்துமீறல்கள் பண விநியோகம் போன்றவற்றை அனுமதித்துவிட்டு, வெளிப்படையாகவே தன்னை மத்திய, மாநில அரசுகளின் முகவர் போல காட்டிக்கொண்ட காட்சிகளைப் பார்த்தோம். இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இத்தகைய மோசமான செயல்பாடுகள் கடும் கண்டனத்துக்கு உரியது; ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என்பதைத் தெரிவித்துக்கொள்வதோடு, தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டதாகச் செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com