பாஜகவுடன் பேசவில்லை; பாஜக ஆட்சியின் அக்கிரமங்களைத் தான் பேசி வருகிறேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பா.சரவணனை ஆதரித்து விரகனூர், மேல அனுப்பானடி, வில்லாபுரம், வலையங்குளம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை பிரசாரம் செய்த அவர் பேசியது: நான் பாஜகவுடன் பேசி வருவதாக, அபாண்டமான பொய்யை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார். அவர் கூறுவதைப் போல, பாஜகவுடன் பேசவில்லை; பாஜக ஆட்சியின் அக்கிரமங்களைத் தான் பேசி வருகிறேன். தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட அவர் வைப்புத்தொகை (டெபாசிட்) கூட பெற முடியாத நிலையில், தோல்வி பயத்தில் இவ்வாறு பேசி வருகிறார்.
தூத்துக்குடி மட்டுமல்லாமல், நாடு முழுவதும் பாஜக ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியாது. பொய் பேசுவதில் பிரதமர் நரேந்திர மோடியைப் பின்பற்றுகிறார் தமிழிசை. மத்தியில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், வந்த பிறகும், ஆட்சி முடியும் நிலையிலும் பிரதமர் பொய் பேசி வருகிறார். பாஜக ஆட்சிக்கு வந்த உடன் 5 ஆண்டுகளில் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு நாட்டு மக்கள் வங்கிக் கணக்கில் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வரவு வைக்கப்படும் என்று கடந்த தேர்தலின்போது கூறினார்.
இதற்கெல்லாம் மேலாக, 1987-இல் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானியின் பேரணியை டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்து, அவருக்கு மின்னஞ்சலில் அனுப்பியதாகக் கூறியுள்ளார். ஆனால், 1990-க்குப் பிறகு தான் மின்னஞ்சல், டிஜிட்டல் காமிராக்கள் புழக்கத்தில் வந்தன. அதேபோல, பாலாகோட் தாக்குதல் தொடர்பாக ராணுவ அதிகாரிகள் தன்னுடன் ஆலோசனை நடத்தியதாகவும், தனது ஆலோசனைப்படியே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.
பிரதமர் பொறுப்பில் இருப்பவர் ராணுவத்துடன் நடத்திய ஆலோசனையை வெளியே கூறுவதே தவறு. அதிலும் பொய்யான தகவலைக் கூறியிருக்கிறார். பாஜகவினர் இவ்வாறு பேசுவது புதிதல்ல என்றார்.