மார்ட்டின் உதவியாளர் பழனிசாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கோவையைச் சேர்ந்த லாட்டரி அதிபர் மார்ட்டினுக்குச் சொந்தமான பல்வேறு நிறுவனங்களில் வருமான வரித் துறையினர் கடந்த சில தினங்களுக்கு முன் சோதனை நடத்தினர். நிறுவன ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மார்ட்டினுக்குச் சொந்தமான ஹோமியோபதி கல்லூரியின் காசாளரும், மார்ட்டினின் உதவியாளருமான பழனிசாமியிடமும் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணைக்குப் பின்னர் பழனிசாமி கோவை காரமடை பகுதியில் உள்ள குட்டையில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பழனிசாமியின் மகன் ரோஹின்குமார் தாக்கல் செய்த மனுவில், எனது தந்தையை வருமான வரித் துறை அதிகாரிகள் மார்ட்டினுக்குச் சொந்தமான நிறுவனத்துக்கு அழைத்துச் சென்று துன்புறுத்தி கொலை செய்து அவரது உடலை காரமடை குட்டையில் வீசியுள்ளனர்.
எனது தந்தை தற்கொலை செய்து கொண்டதாக புகார் மனு எழுதி, அந்த மனுவில் கையெழுத்திட வேண்டும் என காரமடை போலீஸார் நிர்பந்தம் செய்தனர். மேலும், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள எனது தந்தையின் உடலில் பல பகுதிகளில் ரத்தக் காயங்கள் உள்ளன. எனவே எனது தந்தையின் உடலை மருத்துவர்கள் குழுவைக் கொண்டு உடற்கூறு ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்.
அந்த மருத்துவர் குழுவில் எங்களது தரப்பு மருத்துவர் ஒருவரை இடம்பெற அனுமதிக்க வேண்டும். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மார்ட்டின் உதவியாளர் பழனிசாமியின் மரணம் தொடர்பான விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர்.
அத்துடன் மாஜிஸ்ட்ரேட் விசாரணைக்கு உத்தரவிட்டு சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை முடித்துவைத்தது.