சென்னை: சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றனர் என்று மத்திய, மாநில அரசுகளை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கிண்டல் செய்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி இடைத்தேர்தலுக்காக தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர், ' சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே' என்றார். அவரது இந்த பேச்சு தேசிய அளவில் கடும் சர்ச்சையினை உண்டாக்கியது. அவர் மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவர் முன்ஜாமீ ன் கேட்டு மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார்.
19-ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை வெள்ளி மாலையுடன் முடிவடைந்தது.
அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரத்தின் போது தெரிவித்த கருத்துகளினால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர் பிரசாரம் செய்யவில்லை. பின்னர் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் துவக்கிய போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்யய அனுமதி மறுக்கப்பட்டது.
அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் வியாழன் இரவு கமல் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் , மேடையை நோக்கி செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டன.
அதையடுத்து நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை முடியும் தருவாயில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் வெள்ளி மாலை புதிய பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டார் .
இந்நிலையில் சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்த நினைக்கின்றனர் என்று மத்திய, மாநில அரசுகளை, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் கிண்டல் செய்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளியன்று வெளிட்ட புகைப்பட பதிவில் கூறியுள்ளதாவது:
சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய / மாநில அரசுகள்.
மக்கள் எடுத்து விட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது.
12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ 'இந்து' என்கின்ற மதக்குறிப்பு சொல்லப்படவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன்பு ஆழ வந்தாராலோ 'இந்து' என்று நாமகரணம் செய்யப்பட்டோம்.
இவ்வாறு தொடங்கி அவர் கீழ்கண்ட பதிவை வெளியிட்டுள்ளார்.