சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை முடியும் தருவாயில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் புதிய பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
தமிழகத்தில் வரும் 19-ஆம் தேதி நடைபெற உள்ள நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை வெள்ளி மாலையுடன் முடிவடைகிறது.
அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரத்தின்போது தெரிவித்த கருத்துகளினால் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து தொடர்ந்து இரண்டு நாட்கள் அவர் பிரசாரம் செய்யவில்லை.
பின்னர் அவர் தனது பிரசாரத்தை மீண்டும் துவக்கிய போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பிரசாரம் செய்யய அனுமதி மறுக்கப்பட்டது.
அதேசமயம் திருப்பரங்குன்றத்தில் வியாழன் இரவு கமல் பங் கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், மேடையை நோக்கி செருப்பு, முட்டை ஆகியவை வீசப்பட்டன.
இந்நிலையில் நான்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை முடியும் தருவாயில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன் புதிய பரப்புரை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .
இதுதொடர்பாக வெள்ளி மாலை அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:
நான் பரப்புரை செய்ய எனக்கு ஒரு ஊரில் அனுமதி மறுக்கப்பட்டது. விஞ்ஞானத்திற்கு நன்றி. இதோ என் பரப்புரை தமிழ்நாடு காண....
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சுமார் மூன்றரை நிமிடங்கள் ஓடும் அந்த விடியோவில், ஓட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்த போது அவர் சந்தித்த, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த காளியப்பன் என்ற வாலிபரின் குடும்பத்தினர் பற்றி பேசியுள்ளார்.
இறுதியில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டு சம்பவ நினைவு தினம் வரவுள்ள நிலையில், அது நினைவு நாள் மட்டும் அல்ல.. அதற்கு காரணமாக அமைந்தவர்களை, நமது நினைவில் இருந்து நிரந்தரமாக அகற்றும் நாளாகவும் அமைய வேண்டும் என்று உணர்ச்சிகரமாக குறிப்பிட்டுள்ளார்.