
திருச்சி: அரசியலில் கமலுக்கு நல்ல பக்குவம் தேவை என்றார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.
திருச்சிக்கு வெள்ளிக்கிழமை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதி இடைத்தேர்தலில் தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவும், மத்தியில் வளர்ச்சித் திட்டங்கள் தொடரும் வகையிலும் வாக்களிக்க வேண்டும்.
தேர்தல் பிரசார காலத்தில் தேவையில்லாமல் கமல்ஹாசன் சில கருத்துகளை பதிவு செய்கிறார். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என நினைக்கிறாரா?.
திரைப்படத்தில் பிரபலமாகிவிட்டோம் என்பதற்காக எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால், அவரது முதிர்ச்சியின்மை தெரிகிறது. அரசியலில் கமலுக்கு நல்ல பக்குவம் தேவை. பிரிவினைக் கருத்துகளைப் பேசினால் எத்தகைய பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டும் என்பதை யூகித்து பேச வேண்டும்.
இந்து தீவிரவாதம் என குறிப்பிடும்போது ஒட்டுமொத்த இந்துக்களையும் புண்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. சினிமாவில் கருத்துச் சொன்னாலே எதிர்ப்புக் கிளம்புகிறது.
மேற்குவங்கத்தில் திட்டமிட்டு வன்முறையைப் புகுத்துகின்றனர். தமிழகத்தில் அத்தகைய நிலை இல்லை. நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கூறியதற்கு பாஜக வேட்பாளர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
மக்கள் நீதி மய்யத்துடன் பாஜகவுக்கு எந்த ரகசிய உறவும் இல்லை. திமுக மட்டுமே பல கட்சிகளுடன் ரகசிய உறவும், ரகசிய சந்திப்புகளையும் நடத்தி வருகிறது என்றார் அவர்.