
ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதான இடைத்தரகர் ரேகாவுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தைச் சேர்ந்தவர் அமுதா என்ற அமுதவள்ளி (50). விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர். இவர், கடந்த மாதம் 25-ஆம் தேதி, குழந்தைகள் விற்பனை தொடர்பாக வாடிக்கையாளர் ஒருவரிடம், செல்லிடப்பேசியில் பேரம் பேசிய தகவல் கட்செவி அஞ்சல் (வாட்ஸ் அப்) ஒலிநாடாவில் வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து, ராசிபுரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன், கொல்லிமலை ஆம்புலன்ஸ் ஓட்டுநர் முருகேசன், ஈரோட்டைச் சேர்ந்த இடைத்தரகர்களான அருள்சாமி, பர்வீன்பானு, ஹசினா என்ற நிஷா, லீலா, செல்வி ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.
அதன்பின் வழக்கு சி.பி.சி.ஐ.டி வசம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி, சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் சாந்தி என்பவரைக் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் இன்னும் பல இடைத்தரகர்களுக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களை தேடி பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவைச் சேர்ந்த ரேகா (வயது 40) என்ற பெண்ணுக்கு குழந்தை விற்பனையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் பெங்களூரு விரைந்து சென்று ரேகாவை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரை போலீசார் நாமக்கல் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் இச்சம்பவத்தில் கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கைதான இடைத்தரகர் ரேகாவை நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது அவரை மே 31 வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.