உதகையில் தொடங்கியது 5 நாள் மலர் கண்காட்சி: ஆளுநர் பங்கேற்பு

உதகையின் பிரதான மலர் திருவிழாவான 123-ஆவது மலர் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-ஆவது மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-ஆவது மலர் கண்காட்சியைத் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.


உதகை: உதகையின் பிரதான மலர் திருவிழாவான 123-ஆவது மலர் கண்காட்சி அரசினர் தாவரவியல் பூங்காவில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

  5 நாள்கள் நடைபெறும் இக் கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து, மக்கள் அனைவரும் இயற்கையோடு இணைந்து வாழ வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

 கண்காட்சியில் சுமார் 35,000 மலர்த் தொட்டிகளில் மலர் ரகங்கள் காட்சி மாடங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதேபோல சுமார் ஒன்றரை லட்சம் கார்னேசன் மலர்களால் நாடாளுமன்றக் கட்டடம் போன்ற பிரம்மாண்ட தோற்றம் உருவாக்கப்பட்டிருந்தது.

5,000 மலர் தொட்டிகளால் மலர் நீர்வீழ்ச்சியும், 3 இடங்களில் மலர் செல்பி ஸ்பாட்டுகளும், 10 மலர் அலங்கார வளைவுகளும் உருவாக்கப்பட்டிருந்தன. அத்துடன் ஹாலந்து நாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட 2,000 துலீப் மலர்கள், 100 ஆர்கிட் மலர்கள், 100 கேலா லில்லி மலர்கள், ஆந்தூரியம் மலர்களும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.


 இக்கண்காட்சியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

 இந்தியாவிலேயே அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் சுற்றுலா மையமாக உதகை உள்ளது. மலைகள்,  நீர்வீழ்ச்சிகள், இயற்கை புல்வெளிகள், மலர்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன. உலகிலேயே முதல் சுற்றுச்சூழல் மண்டலமாக நீலகிரி உள்ளது. தொட்டபெட்டா  மலைச்சிகரம்,  பைக்காரா ஏரி, உதகை  ஏரி, டால்பின் நோஸ் காட்சி முனை, அவலாஞ்சி, மலை ரயில் உள்ளிட்டவை  சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து வருகின்றன. 

அதேபோல,  உதகையிலிருந்து 35 கி. மீ. தூரத்தில் இருக்கும் முதுமலை புலிகள் காப்பகம் பழைமையானது. இங்கு 250 அரிய வகை ஹார்ன்பில், பிளைகேட்சர் உள்ளிட்ட பறவை வகைகளும் உள்ளன.

 உதகை  மலர் கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. உதகையில் முதன்முறையாக 1896-ஆம் ஆண்டில் மலர்க் காட்சி நடத்தப்பட்டது. இதையடுத்து 100-ஆவது மலர்க் கண்காட்சியையொட்டி 10 ஏக்கரில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. தற்போது இப்பூங்கா உலக அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. 

இந்திய அளவில் 19 சதவீத கொய்மலர்கள் தமிழகத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.  சுமார் ஒன்றரை லட்சம்  மலர்களால் உருவாக்கப்பட்டுள்ள நாடாளுமன்றக் கட்டடம், துலீப் மலர்கள்,  மலர் நீர்வீழ்ச்சி போன்றவை பார்வையாளர்களை கவர்ந்துள்ளன. 

 பெட்ரோலிய பொருள்கள், பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மக்கும் பொருள்களை மறுசுழற்சி முறையில் சுத்தப்படுத்தி நமது வசிப்பிடத்தை மேம்படுத்த வேண்டும். அனைவரும் இயற்கையோடு இணைந்து, எளிமையாக வாழ கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் தமிழக வேளாண் உற்பத்தி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, ஆளுநரின் கூடுதல் செயலர் ஆர்.ராஜகோபால்,  நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, தோட்டக் கலைத் துறை இயக்குநர் சுப்பையன், கோவை மண்டல காவல்துறை தலைவர் பெரியய்யா, துணைத் தலைவர் கார்த்திகேயன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா, தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்பிரமணியம் சாம்ராஜ் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com