ஆற்காடு அருகே கணவர் மற்றும் குழந்தையைக் கொலை செய்த இளம் பெண்ணை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா மந்தைவெளிசந்து தெருவைச் சேர்ந்தவர் ராஜா (25). எலக்ட்ரீசியன். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தீபிகாவும் (20) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பிரவீண் என்ற ஒரு வயது குழந்தை இருந்தது.
இந்நிலையில், தீபிகா தனது கணவர் மற்றும் குழந்தையை கடந்த 13-ஆம் தேதி முதல் காணவில்லை என்று ஆற்காடு கிராமியக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் தீபிகாவிடம் விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தாராம். இதையடுத்து போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில், கணவர் ராஜா அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து தகராறு செய்து வந்ததால் கடந்த 12-ஆம் தேதி இரவு கணவர் ராஜாவையும் மகன் பிரவீணையும் கொலை செய்து, வீட்டின் அருகே புதைத்து, அதன் மேல் விறகுகள் அடுக்கி வைத்ததாகக் கூறினார். இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை டிஎஸ்பி கலைச்செல்வம் அங்கு சென்று விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை தீபிகா காட்டினார். ரத்தக் கறை படிந்த துணிகளை அருகிலேயே எரித்து விட்டதாகக் கூறினார்.
இதைத் தொடர்ந்து டிஎஸ்பி கலைச்செல்வம் தலைமையில் ஆற்காடு வட்டாட்சியர் வத்சலா, தடயவியல் துறை அலுவலர்கள் முன்னிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை மருத்துவக் குழுவினர் சடலங்களைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தனர்.
மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து, இக்கொலை வழக்கில் தொடர்புடைய அதே பகுதியைச் சேர்ந்த இளைஞரைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.