திருப்பதியை அடுத்த கல்யாணி நீர்த்தேக்கம் பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்த முயன்ற தமிழகத்தைச் சேர்ந்த இருவரை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
கல்யாணி நீர்த்தேக்கம் பகுதியில் இப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சிலர் வனத்திற்குள் சென்றதன் அடையாளமாக காலடித் தடங்கள் காணப்பட்டன. அவற்றைப் பின்பற்றி சென்ற போலீஸார், வனத்துக்குள் சிலர் செம்மரக் கட்டைகளை வெட்டி எடுத்துச் செல்வதைக் கண்டனர். போலீஸாரைக் கண்டவுடன் அந்த நபர்கள் செம்மரக் கட்டைகளைப் போட்டு விட்டுத் தப்பியோடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார், 2 பேரைக் கைது செய்து 11 செம்மரக் கட்டைகளைப் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்டவர்கள் விழுப்புரம் மாவட்டம், கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி(23), தர்மன்(25) என்பது தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.