உளுந்தூர்பேட்டை வட்டம், எடைக்கல் காப்புக்காட்டில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக, குடிப்பதற்கு தண்ணீர் இல்லாததால் சாலையோரம் வெள்ளிக்கிழமை மான் மயங்கி விழுந்தது.
உளுந்தூர்பேட்டை வட்டம், புல்லூர் குறுக்கு சாலை அருகே எலவனாசூர்கோட்டைக்குச் செல்லும் சாலையில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மான் குட்டி ஒன்று சாலையோரம் மயங்கி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது.
இதனைப் பார்த்த அந்த வழியாகச் சென்ற எடைக்கல் தனிப்பிரிவு காவலர் சக்திவேல் மற்றும் சமூக ஆர்வலர்கள், மானை மீட்டு, அதற்கு தண்ணீர் கொடுத்தனர். பின்னர், அந்த மானை உளுந்தூர்பேட்டை வனத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.