சென்னை: நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களித்த விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, மே 23-ஆம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் போட்டியிட்ட அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா தாக்கல் செய்த மனுவில், "தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதியன்று நடைபெற்றது. விருகம்பாக்கம் வாக்குச்சாவடியில் நடிகர் ஸ்ரீகாந்தும், அவரது மனைவியும் வாக்களித்தனர்.
ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயர்கள் இல்லை. இந்த குளறுபடிக்குக் காரணம் அதிகாரிகள்தான். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத காரணத்தால் பலர் வாக்களிக்க முடியாமல் திரும்பச் சென்றனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் நடிகர்களை வாக்களிக்க அனுமதித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநிலத் தேர்தல் அதிகாரி கூறியிருந்தாலும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி வாக்களித்த விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டேன். இதுவரை மறு தேர்தல் குறித்து அறிவிக்கப்படவில்லை. எனவே 4 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தல் வரும் மே 19-ஆம் தேதியன்று நடைபெற உள்ளது. அத்துடன் விருகம்பாக்கம் 109-ஆவது வார்டு வாக்குச்சாவடிக்கு மறு தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனு தொடர்பாக தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் கொண்ட அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.