கட்சித் தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை

கட்சித் தலைமையின் உத்தரவை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்
கட்சித் தலைமையின் உத்தரவை மீறி செயல்பட்டால் நடவடிக்கை


சென்னை: கட்சித் தலைமையின் உத்தரவை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
மக்களவைத் தேர்தலின்போது ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள் சிலர் ஒன்றுகூடி மாவட்டத் தலைவரின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து, அவருக்கு எதிரான சில முரண்பாடான கருத்துகளைப் பேசியுள்ளனர். இதுகுறித்து பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர்  தேவேந்திரன் புகார் தெரிவித்துள்ளார். மேலும், வழக்குரைஞர் மூலம் நிர்வாகிகள் மீது மான நஷ்ட வழக்குத் தொடுக்கப் போவதாக நோட்டீஸýம் அனுப்பியுள்ளார். மாவட்டத் தலைவருக்கு எதிரான செய்திகள் பத்திரிகையில் வெளிவர காரணமாக இருந்த நிர்வாகிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அதேநேரம், புதிதாக நியமிக்கப்பட்ட நகரத் தலைவரின் நியமனம் ரத்து செய்யப்படுகிறது. 

மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பின்னர் சம்பந்தப்பட்ட இரு தரப்பினரையும் நேரில் அழைத்து உரிய முறையில் தீர்வு காணப்படும். இந்தப் பிரச்னை தொடர்பாக எந்த ஒரு நிர்வாகியும் பத்திரிகை, ஊடகம் அல்லது சமூக வலைதளங்களில்  எந்தவிதமான செய்திகளையும் வெளியிடவேண்டாம்.  இதை மீறி எவரேனும் செயல்பட்டால் காங்கிரஸ் கட்சியின் அமைப்பு விதிகளின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி தமிழகம் முழுவதும்  மே 21 ஆம் தேதி நடைபெற உள்ள அமைதி ஊர்வலத்தை காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக நடத்த வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com