குன்னூர் சிம்ஸ் பூங்காவில் மலர்கள் பூத்துக் குலுங்குவதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
குன்னூரில் நிலவும் குளிர்ச்சியான காலநிலை காரணமாக இங்குள்ள சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா போன்ற பகுதிகளில் டேலியா, சாமந்தி, ரோஜா உள்ளிட்ட மலர்கள் பூத்து குலுங்குகின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி, கேரளம், கர்நாடகம், வட மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர்.
உதகையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற மலர்க் கண்காட்சியைக் கண்டு ரசித்த மக்களில் பெரும்பாலானவர்கள் குன்னூரில் உள்ள டால்பின் நோஸ், லேம்ஸ்ராக், சிம்ஸ் பூங்கா, காட்டேரிப் பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களைக் காணவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் விதமாக தட்பவெப்ப நிலையும் சாதகமாக உள்ளது. இந்தக் காலநிலைக்கு ஏற்றாற்போல மலரக் கூடிய மலர்களும் தற்போது அதிக அளவில் பூத்துக் குலுங்குகின்றன. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர்.