பிரசித்தி பெற்ற திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் வைகாசி விசாக தேர்த் திருவிழாவில், கணபதி, செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது.
கைலாசநாதர் ஆலயத்தில் தென்னிந்திய சிவாச்சார தெலுங்கு சங்கத்தினரால் அர்த்தநாரீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் அண்மையில் நடைபெற்றது.
தொடர்ந்து, செங்கோட்டுவேலவர், ஆதிகேசவப் பெருமாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சனிக்கிழமை காலை மகா கணபதி திருத்தேர் வடம் பிடித்து பக்தர்கள் இழுத்தனர்.
நான்கு ரத வீதியில் தேர் சுற்றி வந்தது. மாலை செங்கோட்டுவேலவர் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். இரவு ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆதிகேசவப் பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மேல் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், காவல் துணை கண்காணிப்பாளர் சண்முகம், திருச்செங்கோடு கோயில் உதவி ஆணையர் கருணாநிதி மற்றும் காவல் ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள், கட்டளைதாரர்கள் கலந்துகொண்டு பெரிய தேரை வடம் பிடித்து இழுத்து தொடக்கி வைத்தனர்.
இதில், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரில் சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீசுவரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாய்க்கிழமை திருத்தேர் நிலை சேர்ந்தது. மாலையில் ஆதிகேசவப் பெருமாள் தேரோட்டம் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, நடராஜர் தரிசனம், கொடி இறக்கம் நடத்தப்பட்டு 13-ஆம் நாளான புதன்கிழமை வசந்தோற்சவம் நடைபெறும்.
14-ஆம் நாளான வியாழக்கிழமை சுவாமிகள் பரிவார மூர்த்திகளுடன் கைலாசநாதர் திருக்கோயிலில் எழுந்தருளி நாலுகால் மண்டபத்தில் ஊஞ்சல் ஆடி ருத்ராட்ச மண்டபத்தில் சுவாமி மாலை மாற்றி அதிகாலை திருமலைக்கு எழுந்தருளி திருவிழா நிறைவு பெறுகிறது.