நிகழாண்டில் 60% பி.இ. மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி: இறுதிப் பருவத் தேர்வு முடிவுகள் வெளியீடு
நடந்து முடிந்த கல்வியாண்டில் (2018-2019) பொறியியல் மாணவர்களில் 60 சதவீதத்தினர் மட்டுமே அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிபெற்று, படிப்பை முடித்து வெளிவந்திருக்கின்றனர். இது கடந்த ஆண்டைவிடக் குறைவாகும்.
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு 2019 ஏப்ரல்-மே மாதத்தில் நடத்தப்பட்ட இறுதிப் பருவ (8-ஆம் பருவம்) தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக் கழகம் புதன்கிழமை வெளியிட்டது. இதில் ஒட்டுமொத்தமாக 65 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தத் தேர்வை 2015-16-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர்ந்த நடப்புப் பருவ மாணவர்கள் மட்டுமின்றி, 2013-14- ஆம் ஆண்டில் சேர்ந்து பல்வேறு பாடங்களில் அரியர் வைத்துள்ள 10,000 மாணவர்கள் உள்பட மொத்தம் 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். இவர்களில் 84 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் கூறியது:
இறுதிப் பருவத் தேர்வில் 65 சதவீதத்தினர், அதாவது 84 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் அரியர் தேர்வெழுதிய பழைய மாணவர்கள் 5,000 முதல் 6,000 பேர் வரை தேர்ச்சி பெற்றிருக்க வாய்ப்புள்ளது. எனவே, 2015-16-ஆம் கல்வியாண்டில் பி.இ. படிப்பில் சேர்ந்த நடப்பு பிரிவு மாணவர்கள் 60 சதவீதத்தினர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது நூற்றுக்கு 60 பேர் மட்டுமே பொறியியல் படிப்பை முழுமையாக முடித்து வெளிவந்துள்ளனர் என்றனர்.
உடனடித் தேர்வு தேவை: இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியது: கடந்த 2014-2018 பொறியியல் பிரிவில் 70 சதவீதத்துக்கு அதிகமான மாணவர்கள் பி.இ. முடித்து வெளிவந்தனர். ஆனால் இந்த முறை 2015-19 பிரிவு மாணவர்கள் 60 சதவீதத்தினர் மட்டுமே படிப்பை முடித்துள்ளனர்.
இதற்கு, அண்ணா பல்கலைக் கழகம் கடந்த ஆண்டு முதல் தேர்வு முறையிலும், கேள்வித்தாள் தயாரிப்பு முறையிலும் அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்ததே காரணம்.
பொறியியல் மாணவர்களின் தரத்தை மேம்படுத்த கொண்டுவந்த இந்த மாற்றங்கள் வரவேற்கத்தக்கதுதான். ஆனால், இந்த மாற்றங்களுக்கேற்ப மாணவர்கள் தங்களைத் தயார் செய்துகொள்ள இன்னும் ஒருசில ஆண்டுகள் ஆகும்.
எனவே, மாணவர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, தோல்வியடைந்த மாணவர்களுக்கு உடனடித் தேர்வு முறையை இப்போதே அறிமுகம் செய்யவேண்டும்.
வரும் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத் துறைகளுக்கு மட்டும் கொண்டுவரப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள உடனடித் தேர்வு முறை, அனைத்து பொறியியல் மாணவர்களுக்கும் இப்போதே அறிமுகம் செய்யவேண்டும் என்றார் அவர்.