தமிழகத்தில் வெள்ளிக்கிழமை 9 இடங்களில் 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது. அதிகபட்சமாக, வேலூர், திருத்தணியில் தலா 108 டிகிரி வெப்பநிலை பதிவானது.
திருச்சி, கரூர்பரமத்தியில் தலா 104 டிகிரி, சேலத்தில் 103 டிகிரி, மதுரை விமானநிலையம், தருமபுரியில் தலா 102 டிகிரி, சென்னை விமானநிலையம், நாமக்கல்லில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது:
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக சில இடங்களில் அனல் காற்று வீசியது. இதே நிலை தொடரும். தென் வங்கக் கடலில் பெரும்பாலான பகுதிகள், வடக்கு அந்தமான் கடல், அந்தமான் தீவுகள் ஆகிய பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உள்ளது.
மிதமான மழை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். வெப்பநிலையைப் பொருத்தவரை, அதிகபட்சமாக 98 டிகிரி வரை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றார் அவர்.
மழை அளவு: வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி, தேனி மாவட்டம் கூடலூரில் 30 மி.மீ., தேனி, பெரியாறு, அரண்மனைபுதூர், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை, நீலகிரி மாவட்டம் கேட்டி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 20 மி.மீ. மழை பதிவானது.