மே 28-இல் காவிரி ஆணையக் கூட்டம்: 9.2 டிஎம்சி தண்ணீர் தேவை: தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படுமா?

காவிரி ஆணையத்தின் கூட்டம் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கு  ஜூன் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை
மே 28-இல் காவிரி ஆணையக் கூட்டம்: 9.2 டிஎம்சி தண்ணீர் தேவை: தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படுமா?

காவிரி ஆணையத்தின் கூட்டம் மே 28-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழகத்துக்கு  ஜூன் 1-ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய 9.2 டிஎம்சி தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.
மாதந்தோறும் எவ்வளவு?: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஜூன் மாதம் 9.19 டிஎம்சி., ஜூலை மாதம் 31.24 டிஎம்சி., (புதுச்சேரிக்கு வழங்குவதைத் தவிர்த்து), ஆகஸ்ட் மாதம் 45.95 டிஎம்சி., செப்டம்பர் மாதம் 36.76 டிஎம்சி., அக்டோபர் மாதம் 20.22 டிஎம்சி., நவம்பர் மாதம் 13.78 டிஎம்சி., டிசம்பர் மாதம் 7.35 டிஎம்சி., ஜனவரி மாதம் 2.76 டிஎம்சி, பிப்ரவரி முதல் மே மாதம் வரை 2.50 டிஎம்சி என மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை தமிழகத்துக்கு கர்நாடகம் விடுவிக்க வேண்டும்.
ஆனால், கர்நாடக அணைகளிலுள்ள தண்ணீர் தங்களது குடிநீர்த் தேவைக்கு சரியாக இருப்பதாகக் கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடகம் தாமதம் செய்து வருகிறது.
ஒழுங்காற்று குழுக் கூட்டம்: காவிரி விவகாரத்தில் நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு, காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. காவிரி ஒழுங்காற்றுக் குழுவில் கேரளம், கர்நாடகம், தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 9  பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழுவின் கூட்டம், கடந்த வியாழக்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. இக் கூட்டத்தில், தமிழக அரசின் பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் (திருச்சி பிரிவு) செல்வராஜ் மற்றும் காவிரித் தொழில்நுட்பக் குழுத் தலைவர் சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் தமிழக பிரதிநிதிகள் பங்கேற்று, தமிழகத்துக்கு ஜூன் 1ஆம் தேதி முதல் வழங்க வேண்டிய 9.2 டிம்சி தண்ணீரை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி ஆணையக் கூட்டம்: ஒழுங்காற்று குழுக் கூட்டத்தை தொடர்ந்து, காவிரி ஆணையக் கூட்டமானது புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை (மே 28) நடைபெறவுள்ளது. இக் கூட்டத்திலும், தமிழக பிரதிநிதிகள் கலந்து கொண்டு அதே கோரிக்கையை வலியுறுத்தவுள்ளனர். தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கர்நாடகம் உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பதே காவிரி, டெல்டா பாசன விவசாயிகளின் பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது.
மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு கர்நாடகத்துக்கு அனுமதியளித்த மத்திய நீர்வள ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசானது உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது பாராட்டுக்குரியது.
 இதுபோல, கர்நாடகத்திடமிருந்து பெற வேண்டிய மாதாந்திரத் தண்ணீரைப் பெறவும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதுமட்டுமல்லாது, கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை வைகை-குண்டாறு நதிகளையும் இணைக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும். இதன் மூலம், திருச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பயன்பெறும் என்றார் தமிழ்நாடு காவிரி நீர்ப்பாசன விவசாயிகள் நலச் சங்கத் தலைவர் மகாதானபுரம் வி. ராஜாராம்.
காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, தமிழகத்திற்கு பிப்ரவரி முதல் மே மாதம் வரை கர்நாடகம் வழங்க வேண்டிய தண்ணீரை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும், ஜூன் 1ஆம் தேதி முதல் 9.2 டிஎம்சி தண்ணீரை திறக்க வேண்டும். கர்நாடகம் தொடர்ந்து தண்ணீர் வழங்க மறுத்தால் கர்நாடகத்தில் உள்ள கேஆர்எஸ், ஹேரங்கி, கபினி உள்ளிட்ட அனைத்து அணைகளையும் காவிரி ஆணையம் தன் வசப்படுத்த வேண்டும். மத்திய தொழில் பாதுகாப்புப் படை பாதுகாப்பு அளிக்க வேண்டும். தேர்தல் ஆணையத்தைப் போன்று, காவிரி ஆணையமும் தன்னாட்சி பெற்ற அமைப்பாக செயல்பட அங்கீகரிக்க வேண்டும். ஜூன் மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை கடந்த 7ஆண்டுகளாக கர்நாடகம் உரிய நேரத்தில் வழங்காததால், குறுவை சாகுபடியே நடைபெறவில்லை. இந்தாண்டு அதே நிலை தொடராதிருக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் புலியூர் ஏ.நாகராஜன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com