சென்னை கோட்டூர்புரம் அருகே அப்பகுதி போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அதே சாலையில் இருசக்கர வாகனத்தில் மர்ம நபர் 3 முறை பயணித்துள்ளார். இதையடுத்து சந்தேகமடைந்த போலீஸார், அந்த மர்ம நபரை தடுத்து நிறுத்த முயன்றனர்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் அந்த மர்ம நபர் வேகமாக சென்றுள்ளார். போலீஸாரும் ரோந்து வாகனத்தில் துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில், தன்னிடம் இருந்த 3 பைகளை அந்த மர்ம நபர் சாலையில் வீசியுள்ளார். இதனால் போலீஸார் அந்த பைகளை சோதனை செய்தனர்.
இதற்குள் அந்த மர்ம நபர் தப்பியுள்ளார். அந்த பைகளில் இருந்து ரூ. 1.56 கோடி பணத்தை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட பணம் கோட்டூர்புரம் காவல்நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.