ஈரோட்டில் ரயிலின் ஜன்னலோரம் இருந்த பெண்ணிடம் 5 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபரை ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர்.
ஒசூர் கே.பி.ஜி. நகரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி நிர்மலா (48) என்பவர் அவரது குடும்பத்தினருடன் ஞாயிற்றுக்கிழமை இரவு மைசூரு செல்லும் ரயிலில் முன்பதிவு பெட்டியில் குடும்பத்துடன் பயணித்தார். இதில் நிர்மலா ஜன்னலோர இருக்கையில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, ஈரோடு ரயில் நிலையத்தின் ஒன்றாம் எண் நடைமேடைக்கு திங்கள்கிழமை அதிகாலை 2 மணிக்கு ரயில் வந்தது. பின்னர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு மெதுவாக நகரத் துவங்கியது. அப்போது, நடைமேடையில் நின்று கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் நிர்மலா அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து சேலம் ரயில் நிலையத்தை அடைந்ததும் நிர்மலா ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார்.
ஆனால், சம்பவம் ஈரோட்டில் நடைபெற்றதால் ஈரோடு ரயில்வே போலீஸாரின் விசாரணைக்கு புகாரை மாற்றினர். இதன் அடிப்படையில் ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து நகைப் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.