புதுவையில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, பாஜகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவையில் மக்களவைத் தேர்தல் முடிந்தவுடனேயே மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந் நிலையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநில பாஜக தலைவர் வி.சாமிநாதன் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் புதுச்சேரி உப்பளம் மின் துறை தலைமை அலுவலகம் எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மின் துறை அலுவலக நுழைவு வாயிலைப் பூட்டிய பாஜகவினர், அங்கு வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்களை கீழே போட்டு உடைத்து, மின் கட்டண உயர்வுக்கு எதிராக முழக்கமிட்டனர். இதுகுறித்து பாஜகவினர் கூறியதாவது: நிலுவையில் உள்ள மின் கட்டணத் தொகையை வசூலிக்க முடியாத நிலையில் உள்ள மின் துறை, தற்போது மின் கட்டண உயர்வை அமல்படுத்தியுள்ளது. இது ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கும் செயல். எனவே, உடனடியாக மின் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நியமன எம்எல்ஏ சங்கர், மாநில பாஜக பொதுச் செயலர்கள் தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன், துணைத் தலைவர்கள் ஏம்பலம் செல்வம், செல்வம் உள்பட திரளான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.