எத்திலின் ரைப்பனர் என்ற ரசாயனப் பொடி நேரடியாகப் பயன்படுத்தப்பட்ட 2.50 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினர் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அழித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மா விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு எத்திலின் இன்ஜெக்டர் ஸ்ப்ரே மற்றும் எத்திலின் ரைப்பனர் பொடி ஆகியவற்றை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், சில வாரங்களுக்கு முன்பு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் நடத்தப்பட்டது. இதில் குறிப்பாக, எத்திலின் ரைப்பனர் பொடியை 20 கிலோ மாங்காய்கள் கொண்ட பெட்டிக்கு, 3 பாக்கெட் பொடி வீதம் ஒரு டப்பாவுக்குள் அடைத்து வைத்து பயன்படுத்தலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இந்நிலையில், திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு மாம்பழக் கிடங்கில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் நடராஜன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் சரண்யா உள்ளிட்டோர்
திங்கள்கிழமை திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்கு எத்திலின் ரைப்பனரை நேரடியாக மாம்பழங்கள் மீது பயன்படுத்தியது தெரியவந்தது. எனவே, அந்தக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2.50 டன் மாம்பழங்களையும் பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத் துறையினர், அவற்றை திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு எடுத்துச் சென்று அழித்தனர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் என உணவுப் பாதுகாப்புத் துறையினர் தெரிவித்தனர்.