நாகை மாவட்டம், வைத்தீஸ்வரன்கோயிலில் உழவாரப் பணியில் ஈடுபட்ட இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்ற சிவனடியார்கள் ஞாயிற்றுக்கிழமை கோயில் குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்களை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகமெங்கும் மாதந்தோறும் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமையில் பழைமையான கோயில்களை சுத்தம் செய்து வருகின்றனர். அதன்படி, 210-ஆவது கோயிலாக சீர்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில் உழவாரப்பணியை மேற்கொண்டனர். முதலில் கோயிலில் உள்ள பித்தளை விளக்குகள், பாத்திரங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்தனர். அடுத்து, வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்பாள், செல்வமுத்துக்குமார சுவாமி சந்நிதி சுவர், தரையில் படிந்திருந்த எண்ணெய் படலங்கள், கற்பூரம் ஏற்றப்பட்டு படிந்திருந்த கரும்புகைகளை தண்ணீர் ஊற்றி சுமார் 70-க்கும் மேற்பட்ட ஆண், பெண் சிவனடியார்கள் சுத்தம் செய்தனர். தொடர்ந்து, கோயில் பிராகாரம், பசுமடம், மடப்பள்ளி ஆகியவற்றையும் சுத்தம் செய்தனர்.
கடந்த 2 நாள்களாக கோயில் சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் செத்து மிதந்த ஆயிரக்கணக்கான மீன்களை பாதுகாப்பு அம்சங்களுடன் ரப்பர் படகு அமைத்து முழுமையாக அகற்றி தூய்மைப்படுத்தினர். சிவனடியார்களின் இப்பணியை கோயிலுக்கு வந்த பக்தர்கள் பாராட்டினர்.