ரயில், விமானத்தில் பயணம் செய்து ராமஜென்மபூமி, கதிர்காமம் உள்ளிட்ட இடங்களில் ராமாயண சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
பாரத தரிசன சுற்றுலா, ரயில் சுற்றுலா, பள்ளி, கல்லூரிகளுக்கான கல்வி சுற்றுலா, கார் போக்குவரத்து சேவைகள் போன்றவற்றை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) நடத்தி வருகிறது. இதுதவிர, சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு விமான சுற்றுலாத் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இந்தச் சுற்றுலா திட்டங்களுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், ராமாயண காவியத்தில் இடம் பெற்றுள்ள இடங்களை காணும் வகையில், தமிழகத்தில் இருந்து ரயில், விமானத்தில் ராமாயண சுற்றுலாவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு செய்துள்ளது.
இந்தச் சிறப்பு யாத்திரை ரயில், மதுரையில் இருந்து நவம்பர் 16-ஆம் தேதி புறப்படுகிறது. திண்டுக்கல், கரூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, சென்னை சென்ட்ரல் வழியாக உத்தரப்பிரதேசம் செல்கிறது. அந்த மாநிலத்தின் சித்திரக்கூட நகரத்தில் ராம்காட் நதியில் புனித நீராடி, ராமாயணம் தொடர்பான ஆலயங்கள் தரிசனம் (அயோத்தி காண்டம், பாலகாண்டம்), ரகுநாதபுரத்தில் உள்ள பிரம்மேஸ்வர நாதர் சிவாலய தரிசனம், சீதாமார்தி தரிசனம் ஆகியவை இந்த சுற்றுலாவில்அடங்கும். இந்த 13 நாள் யாத்திரையில் ரயில் பயணக் கட்டணம், சைவ உணவு, ஊர்களை சுற்றிப்பார்க்க வாகன வசதி, தங்கும் இடம் உள்பட ஒருவருக்கான கட்டணம் ரூ.14,720 ஆகும். இதேபோல, சென்னையில் இருந்து நவம்பர் 29-ஆம் தேதி விமானத்தில் புறப்பட்டு, இலங்கையில் கொழும்பு, கண்டி, நுவரேலியா மற்றும் கதிர்காமத்தில் ராமாயண நிகழ்வுகள் நடந்த இடங்களைக் காண 6 நாள் விமான சுற்றுலாவுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான கட்டணம், உணவு, தங்கும் இடம் உள்பட ஒருவருக்கான கட்டண் ரூ.39,900. இது குறித்து மேலும் விவரங்களுக்கு 9003140680, 9003140681ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.