மதுரை: கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டிருக்கும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்க தடை விதித்துள்ளது.
கொடைக்கானல் ஏரியில் போட் கிளப்பினரும், தனியார் ஹோட்டலை சேர்ந்தவர்களும், எந்த அனுமதியும் இன்றி, நகராட்சிக்கு கட்டணம் ஏதும் செலுத்தாமல் படகுச் சவாரி நடத்தி வருகிறார்கள்.
நகராட்சிக்கு எந்த கட்டணமும் செலுத்தாமல் படகுகளை வாங்கிவிட்டு அதனை இயக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால், கொடைக்கானல் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக கொடைக்கானலைச் சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கொடைக்கானல் போட் கிளப்புக்கு சீல் வைக்க உத்தரவிட்டுள்ளனர். மறு உத்தரவு வரும் வரை கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்கக் கூடாது என்றும் தடை விதித்துள்ளனர்.
கொடைக்கானல் போட் கிளப்புக்கு 8 சதுர அடியை குத்தகைக்கு விட்ட நிலையில், அனுமதியின்றி, 10 ஆயிரம் சதுர அடிக்கும் அதிகமான நிலப்பரப்பை போட் கிளப் நிர்வாகத்தினர் பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகளை இயக்க வெளிப்படையான டெண்டர் வெளியிட்டு அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவியில் கூறப்பட்டுள்ளது.