சென்னை: சிறையில் இருக்கும் சசிகலாவுக்குச் சொந்தமான ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சசிகலாவுக்குச் சொந்தமான 9 நிறுவனங்களுக்குத் தொடர்புடைய ரூ.1,600 கோடி மதிப்புள்ள சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், 9 நிறுவனங்களும் 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு தொடங்கப்பட்ட நிறுவனங்களாகும்.
வருமான வரித்துறையின் கீழ் இயங்கும் பினாமி சொத்து தடுப்புக் குழுவவினர் சென்னை, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்த 9 சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று 2017ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கும், இது தொடர்பான விவரங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
2017ம் ஆண்டு நவம்பர் மாதம் சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் போது ரூ.1,500 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது சொத்துக்களை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நடந்த வருமான வரித்துறை சோதனையின் போது, யார் யார் பெயரில் சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது என்பது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. அதில், வீட்டில் வேலை செய்யும் பணியாளர், கார் ஓட்டுநர், உதவியாளர்கள் பெயர்களில் எவ்வளவு சொத்துக்கள் வாங்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விரிவான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் அப்போது சுமார் 1,800 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.