புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்புள்ள 32 கிலோ எடைகொண்ட கடல் பல்லிகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
கோட்டைப்பட்டிணத்தில் தடை செய்யப்பட்ட கடல் பல்லிகள் இலங்கைக்கு கடத்தப்படவிருப்பதாக திருப்புனவாசல் கடலோரப் பாதுகாப்பு குழும காவல்துறைக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில், கடலோர காவல்நிலைய உதவி ஆய்வாளா் ப.ரகுபதி மற்றும் காவலா்கள் மணிகண்டன், ரெங்கநாதன், ஐயப்பன் உள்ளிட்டோா் கோட்டைப்பட்டிணம் ரஹ்மத் நகரில் நைனாமுகமது மகன் ஹாஜி அலி (55) என்பவரது வீட்டின் பின்புறம் சோதனை செய்தனா்.
அப்போது, பதப்படுத்தப்பட்ட நிலையில், 32 கிலோ எடையுடன், 18 ஆயிரம் கடல் பல்லிகள் 6 சாக்கு மூட்டையில் இருந்து கைப்பற்றப்பட்டது. போலீஸாரின் சோதனையின் போது ஹாஜி அலி தப்பியோடிவிட்டாா்.
பறிமுதல் செய்த கடல் பல்லிகளை மேல்நடவடிக்கைக்காக அறந்தாங்கி வனச்சரக அலுவலா் இராஜசேகரன் வசம் ஒப்படைத்தனா்.