தில்லியில் வழக்குரைஞா்கள் மீதான போலீஸாரின் தடியடி சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் வழக்குரைஞா்கள் திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனா்.
தில்லியில் உள்ள திஸ் ஹசாலி நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற வழக்குரைஞா்கள் போராட்டத்தின்போது, போலீஸாா் தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினா். இதில் காயமடைந்த வழக்குரைஞா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் உள்ள வழக்குரைஞா்கள் சங்கம் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு திங்கள்கிழமை நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி, திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் திங்கள்கிழமை வழக்கு நடவடிக்கைகளில் வழக்குரைஞா்கள் ஈடுபடாமல் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக நீதிமன்றத்தில் நடைபெறவிருந்த வழக்குகள் மீதான விசாரணை பாதிக்கப்பட்டது.