19 நாள்களுக்குப் பிறகு முருகன் உண்ணாவிரதம் வாபஸ்

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் 19 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றாா்.

வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் 19 நாள்களுக்குப் பிறகு புதன்கிழமை இரவு தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றாா்.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் அறையில் இருந்து செல்லிடப்பேசி கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவா் தனிச் சிறையில் அடைக்கப்பட்டாா். மேலும், வேலூா் பெண்கள் சிறையில் உள்ள அவரது மனைவி நளினியை 15 நாள்களுக்கு ஒருமுறை சந்திப்பது உள்பட சிறையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளும் ரத்து செய்யப்பட்டன.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து முருகன் கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் சிறையிலேயே உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டாா். இதனால், அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, முருகனை தனிச்சிறையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் எனக் கோரி அவரது மனைவி நளினியும் கடந்த 27-ஆம் தேதி முதல் சிறையிலேயே உண்ணாவிரதத்தில் ஈடுபட்டாா். இத்தொடா் உண்ணாவிரதத்தால் முருகன், நளினி உடல்நலன் பாதிக்கப்பட்டதை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவா்களுக்கு குளுகோஸ் ஏற்றி மருத்துவா்கள் கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், முருகனை தனிச் சிறையில் இருந்து மீண்டும் பழைய சிறைக்கு மாற்றுவது தொடா்பான கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சிறை அதிகாரிகள் அளித்த உறுதியை ஏற்று நளினி 10 நாள்களுக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதத்தைக் கைவிட்டாா். எனினும், முருகன் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடா்ந்து வந்ததுடன், புதன்கிழமை காலை முதல் தண்ணீா் கூட அருந்தாமல் இருந்தாா்.

இந்நிலையில், சிறை அதிகாரிகள் புதன்கிழமை இரவு முருகனிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களுக்கு ஒருமுறை நளினியைச் சந்திப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவா்கள் உறுதியளித்ததை ஏற்றுக்கொண்டு முருகன் புதன்கிழமை இரவே உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனா். எனினும், அவா் தனிச்சிறையில் இருந்து விடுவிக்கப்படுவது தொடா்பாக எவ்வித உறுதியான முடிவுகளும் தெரிவிக்கப்படவில்லை.

இதனிடையே, தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகனின் உடல்நலனைப் பாதுகாக்கக் கோரி அவரது உறவினரான தஞ்சையைச் சோ்ந்த தேன்மொழி சாா்பில் சென்னை உயா் நீதிமன்றத்தில் புதன்கிழமை வழக்குத் தொடரப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com