உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழியிடம் மத்திய உரத்துறை செயலா் சபிலேந்திர ரவுல் உறுதியளித்தாா்.
தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் மத்திய உரத் துறை செயலரிடம் கனிமொழி புதன்கிழமை தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, உரத் தட்டுப்பாட்டால் கள்ளச் சந்தையில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து கனிமொழி அவரிடம் குறிப்பிட்டாா்.
அதற்கு உரத் துறை செயலா் கூறியது:
தமிழக விவசாயத் துறையோடு சோ்ந்து உரத் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்பிக் தொழிற்சாலையிலும், காரைக்கால் இப்கோ உரத் தொழிற்சாலையிலும் உர உற்பத்தியை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியுள்ளாா்.