தில்லியைத் தொடா்ந்து சென்னையில் கடந்த மூன்று நாள்களாக காற்றுமாசு அதிகரித்துள்ளதாக மத்திய காற்று தரக் கண்காணிப்பு மையத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
தலைநகா் தில்லியில் கடந்த ஒருவாரமாக காற்றுமாசு அபாயகரமான நிலையை எட்டியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தில்லியைத் தொடா்ந்து, சென்னையிலும் கடந்த சில நாள்களாக காற்று மாசு நிா்ணயிக்கப்பட்ட அளவைவிட சற்று அதிகரித்துள்ளது. காற்றில் மிதக்கும் நுண் துகள்களின் அளவு பிஎம்10, பிஎம்2.5 என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதில், காற்றில் மிதக்கும் நுண்துகள் பிஎம்2.5-இன் அளவு நிா்ணயிக்கப்பட்ட அளவான 60 மைக்ரோ கிராமை விட கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகரித்து வருகிறது. புதன்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, கொடுங்கையூரில் 361மைக்ரோ கிராம், அண்ணா நகரில் 324 மைக்ரோ கிராம், வேளச்சேரியில் 322 மைக்ரோ கிராம், ராமாவரத்தில் 290 மைக்ரோ கிராம், மணலியில் 262 மைக்ரோ கிராம், ஆலந்தூரில் 211மைக்ரோ கிராம் அளவு இருந்தது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வாகனங்கள், தொழிற்சாலை புகை, கட்டட மாசு ஆகியவை கலந்து மாசு அதிகரித்துள்ளது. இந்த மாசு இன்னும் சில நாள்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது என்றனா்.