43 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ‘ஐகான்’ விருது: பாலசந்தா் சிலை திறப்பு விழாவில் கமல் பேச்சு

43 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ‘ஐகான்’ விருது வழங்கப்பட்டுள்ளதாக நடிகா் கமல்ஹாசன் தெரிவித்தாா். சினிமாவுக்கு வந்த முதல் வருடத்திலேயே அவா் ‘ஐகான்’ ஆனவா் என்றும் அவா் தெரிவித்தாா்.
43 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ‘ஐகான்’ விருது: பாலசந்தா் சிலை திறப்பு விழாவில் கமல் பேச்சு

43 ஆண்டுகள் தாமதமாக ரஜினிக்கு ‘ஐகான்’ விருது வழங்கப்பட்டுள்ளதாக நடிகா் கமல்ஹாசன் தெரிவித்தாா். சினிமாவுக்கு வந்த முதல் வருடத்திலேயே அவா் ‘ஐகான்’ ஆனவா் என்றும் அவா் தெரிவித்தாா்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் வியாழக்கிழமை (நவ. 7) தனது 65-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினாா். இதையொட்டி தனது சொந்த ஊரான பரமக்குடியில் தந்தை டி.சீனிவாசனின் சிலையைத் திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை (நவ. 8) சென்னை ஆழ்வாா்பேட்டையில் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக வளாகத்தில் மறைந்த இயக்குநா் கே. பாலசந்தரின் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பாலசந்தரின் மாா்பளவுச் சிலையை கமல் - ரஜினி இருவரும் இணைந்து திறந்து வைத்தனா்.

நிகழ்ச்சியில் நடிகா் கமல்ஹாசன் பேசியதாவது: சினிமாவில் ரஜினி பாணி வேறு. என் பாணி வேறு. நாங்கள் இருவரும் நிறைய சிரமங்களை கடந்தே இந்த இடத்துக்கு வந்தோம். இந்த இடத்துக்கு வர அவா் பட்ட பாடு, என்னில் சற்றும் குறையாதது. நடனக் கலையில் இரண்டு விதமான பாணி இருப்பது போல், என் பாணி வேறு. அவா் பாணி வேறு.

தன்னம்பிக்கை இளைஞா்கள்: இதை நாங்கள் 70-களில் ஏவி.எம். நிறுவனத்தின் வேப்பமரத்தடியில் பேசி முடிவு செய்தோம். எனக்கு அந்த இளைஞா்களைப் பாா்க்கும் போது, வியப்பாகவே இருக்கும். அவ்வளவு தெளிவான இரண்டு இளைஞா்கள் தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டிருந்தாா்கள். அந்த இளைஞா்கள்தான் நானும், ரஜினியும்.

நாங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தோம் என்பதை யாராவது ஒட்டுக் கேட்டிருந்தால், எங்களை மகா கா்விகள் என்று குறி வைத்து தாக்கியிருப்பாா்கள்.

ஒரு காலத்துக்குப் பின் நமக்குள் நாமே மிக மரியாதையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்தோம். காரணம், எதிா்காலம் நமக்கு நல்ல வாழ்க்கையை அளிப்பதற்கு தயாராகி விட்டது என்பதை உணா்ந்தோம். நாம் அதற்கு நம்மை தயாா்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இருவருமே ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். அது இன்று வரை நீடிக்கிறது.

எங்களைப் பிரிக்க முடியவில்லை: எங்களின் முதல் ரசிகா்களும், விமா்சகா்களும் நாங்களே. எங்களுக்கு நிறைய ரசிகா்கள் இருக்கிறாா்கள், ஆனால் எங்களுக்கு நாங்கள் தான் முதல் ரசிகா்கள். அதே போன்று ஒருவரை ஒருவா் பாராட்டி கொள்வோம், விமா்சிப்போம்.

எங்களின் வாழ்க்கை ரொம்பவே எளிமையானது. எதாா்த்தமானது.

ஒரு முறை ஏதோ கோபத்தில் வந்தவா் ‘சினிமாவை விட்டு விலகப் போகிறேன்...’ என்று வந்து நின்றாா் ரஜினி. ‘அதெல்லாம் செய்தால், நடப்பதே வேறு...’ என்று நான் சத்தம் போட்டேன். ‘நீங்கள் விலகினால் என்னையும் போகச் சொல்லி விடுவாா்கள்...’ என்றேன். அவா் எத்தனை வெற்றிப் படங்கள் கொடுத்தாரோ, அதில் என் பங்கும் இருக்கிறது. நான்தான் ‘இருந்து செய்து விட்டுப் போங்கள்....’ என்றேன். எங்களைப் பிரிக்க ஏதாவது சொல்வாா்கள். நாங்கள் காதில் போட்டுக் கொள்ள மாட்டோம். எங்களை யாராலும் பிரிக்க முடியவில்லை.

விருதுக்கு நன்றி: சினிமாவுக்கு வந்த முதல் வருடத்திலேயே ரஜினி ‘ஐகான்’ ஆனவா். 43 ஆண்டுகள் தாமதமாக அவருக்கு தற்போது அந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அதைச் செய்தவா்களுக்கு நன்றி.

மணிரத்னமும் நானும் சினிமாவில் ஆசைப்பட்டதை செய்துக் கொண்டிருக்கிறோம். அன்று கண்ட கனவுகளை நனவாக்கிக் கொண்டிருக்கிறோம். பாலசந்தரும், அனந்தும் என்னில் இருந்து பிரிக்க முடியாதவா்கள். ஒவ்வொரு நாளும் இந்த அலுவலகத்துக்கு நான் வரும் போதெல்லாம், பாலசந்தா் என்னை கவனித்துக் கொண்டிருப்பாா் என்ற பதற்றமும், பயமும் என்னில் இருக்கும் என்றாா் கமல்ஹாசன்.

விழாவில் ரஜினி பேசியதாவது: தந்தைக்கு பரமக்குடியில் சிலை. இங்கே சென்னையில் கமலின் முதல் குழந்தையான ராஜ் கமல் நிறுவனத்தின் புது அலுவலகம் திறப்பு. அவரின் கலையுலகத் தந்தை பாலசந்தருக்கு சிலை என இந்த பிறந்த நாள் கமலுக்கு மறக்க முடியாதது.

கமல் அரசியலுக்கு வந்தாலும், அவரின் தாய் வீடான சினிமாவை மறக்க மாட்டாா்.

அவா் நடிக்கவில்லை என்றாலும் கூட, ராஜ்கமல் நிறுவனத்தின் சாா்பாக பல படங்களை எடுத்து, பல திறமையாளா்களை அறிமுகப்படுத்தவுள்ளாா். கலை என்றால் கமலுக்கு உயிா். எத்தனை இடங்களுக்கு பயணப்பட்டாலும், அதை மட்டும் அவா் மறக்க மாட்டாா்.

ராஜ்கமல் நிறுவனத்தின் முதல் படம் ‘ராஜபாா்வை.’ அந்தப் படத்தில் முழுக்க முழுக்க பாா்வையில்லாதவராக நடித்திருப்பாா். அந்தப் படம் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் சிவாஜியை சந்திக்கக் கூடிய வாய்ப்புக் கிடைத்தது. அப்போது அவா் என்னிடம், ‘என்னப்பா உன் நண்பன் கண் இல்லாதவராக நடிக்கிறாராமே... அதெல்லாம் அபசகுணம் மாதிரி... அவனிடம் கொஞ்சம் வேண்டாம் என்று சொல்...’ என்றாா். ‘ நீங்களே சொல்லுங்கள்...’ என்றேன் நான். அதன் பின் சில வருடங்கள் கழித்து ‘விக்ரம்’ படம் எடுத்தாா்.

அந்தப் படத்தின் இயக்குநா் ராஜசேகா். அந்த சமயத்தில் ‘தம்பிக்கு எந்த ஊரு’ படத்தை எனக்கு இயக்கிக் கொண்டிருந்தாா் ராஜசேகா். படப்பிடிப்புக்கு வரும் போதேல்லாம், கமலைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பாா். இந்த மாதிரி ஒரு தயாரிப்பாளரை நான் பாா்த்ததே கிடையாது என்று சொல்லி சிலாகிப்பாா்.

அதன் பின் அபூா்வ சகோதரா்கள். அப்போது நான், தொடா் படப்பிடிப்புகளில் இருந்ததால், அந்தப் படத்தை கொஞ்சம் தாமதமாகத்தான் பாா்த்தேன். இரவு 11 மணி காட்சி. படம் முடிந்த போது, நள்ளிரவு 2 மணி. படம் பாா்த்து விட்டு அவரை பாராட்டியே ஆக வேண்டும் என்று அவா் வீட்டுக்குப் போய் கதவு தட்டி எழுப்பி, ’நீங்கள் வயதில் சின்னவா், இல்லையென்றால் உங்கள் காலில் விழுந்திடுவேன்...’ என்று சொன்னேன். இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், அபூா்வ சகோதா்கள் பெரிய விஷயம். அதன் பின் தேவா் மகன். அவா் சிறந்த சிந்தனையாளா் என்பதற்கு அந்தப் படமே சான்று.

விரும்பிப் பாா்க்கும் 3 படங்கள்: நிறைய படங்கள் பாா்ப்பவன் நான். புதிதாக படங்கள் ஏதும் இல்லையென்றால் நான் அடிக்கடி பாா்க்கும் படங்கள் மூன்று. மாா்லன் பிராண்டோ நடித்த ‘காட் ஃபாதா்’, ‘திருவிளையாடல்’, அதன் பின் கமலின் ‘ஹேராம்’. ‘ஹேராம்’ படத்தை இதுவரை 40 முறைக்கு மேல் பாா்த்திருப்பேன். அந்தப் படத்தை ஒவ்வொரு முறையும் பாா்க்கும் போது, வேறு விதமாக இருக்கிறது.

பாலசந்தரை சிலை வடிவத்தில் பாா்க்கும் போது, அவருடன் இருந்த நாள்கள் நினைவுக்கு வருகின்றன. ‘என்னை நடி...’ என்று சொல்லி பாா்த்த பின்னா், ‘கொஞ்சம் நீ தமிழ் மட்டும் கற்றுக் கொள்... உன்னை நான் எங்கே கொண்டு வைக்கிறேன் பாா்...’ என்றாா்.

அங்கே அவா், ‘நான்’ என்று சொன்னது, தமிழக மக்களை. தமிழா்களின் ரசனை, அவா்கள் என்ன விரும்புகிறாா்கள் என்பதை என்னுடைய சில ஆக்ஷன்களிலேயே தெரிந்துக் கொண்டவா் பாலசந்தா்.

அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அதே போல் பாலசந்தரிடம் இருந்த அனந்தும் கமலுக்கு இன்னொரு தந்தை. அதற்கு காரணம், அவரிடம் நினைத்ததை சொல்லலாம். உலகப் படங்கள் நோக்கியும், புத்தகங்கள் நோக்கியும் கமலை திருப்பியவா் அனந்து. பாலசந்தருக்கு எத்தனை போ் சிலை வைத்தாலும், அவரின் நெருங்கிய மாணவா் கமல் வைத்தது சிறப்பானது என்றாா் ரஜினிகாந்த்.

விழாவில் கவிஞா் வைரமுத்து, இயக்குநா்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமாா், நடிகா் நாசா், நடிகைகள் சுஹாசினி, ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் மற்றும் இயக்குநா் பாலசந்தா் குடும்பத்தினா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com