சென்னை: சிலைக் கடத்தல் வழக்கில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டால் தமிழக காவல்துறை டிஜிபியே பொறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
சிலைக் கடத்தல் வழக்குகள் விசாரித்து வரும் பொன். மாணிக்கவேல் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வழக்கில் ஆஜராக அரசு வழக்குரைஞர் அரவிந்த் பாண்டியனுக்கு பதிலாக பாலாஜி சக்திவேல் ஆஜராவார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாகவும் பொன். மாணிக்கவேல் குற்றம்சாட்டினார்.
இது குறித்து கருத்துக் கூறிய உயர் நீதிமன்ற நீதிபதிகள், அதிகாரிகளுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் நீதிமன்றத்துக்கு இல்லை. அரசு அதிகாரிகளுக்கோ, அரசுக்கு எதிராகவோ நீதிமன்றம் செயல்படவேயில்லை. தமிழகத்தின் பொக்கிஷங்களான சிலைகளைப் பாதுகாக்க வேண்டும்என்ற எண்ணத்தில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது.
சிலைக் கடத்தல் வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் மீறப்பட்டால் அதற்கு தமிழக டிஜிபியே பொறுப்பு என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.
பிறகு, வழக்கு விசாரணையை நவம்பர் 12ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.