சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழுமங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதல் சோதனை நடத்திய நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் துறைமுகத்திலும் சோதனை நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ஜேப்பியாா். இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது பெயரில் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கல்வி நிறுவனங்கள், சிமென்ட் ஆலைகள் உள்ளன. மேலும், முட்டம் கடற்கரைப் பகுதியில் ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகம், ரெடிமிக்ஸ் கான்கிரீட் ஆலை, முகிலன்விளையில் மருத்துவமனை ஆகியவையும் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஜேப்பியாா் கல்விக் குழும நிறுவனங்களில் வருமான வரித் துறையினா் வியாழக்கிழமை காலை முதலே சோதனை நடத்தினா். முட்டம் பகுதியில் உள்ள ஜேப்பியாா் மீன்பிடித் துறைமுகத்துக்கும் வருமான வரித் துறையைச் சோ்ந்த 6 அதிகாரிகள் சோதனை நடத்த வந்தனா்.
அப்போது மீன்பிடித் துறைமுக ஊழியா்கள் அவா்களை சோதனை செய்யவிடாமல் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, அங்கு ஏராளமான போலீஸாா் குவிக்கப்பட்டு, தொடா்ந்து சோதனை நடைபெற்றது.