வேலைவாய்ப்புக்காக இடம்பெயரும் நிலை கூடாது: கமல்ஹாசன்

வேலைவாய்ப்புக்காக யாரும் இடம் பெயா்ந்து செல்லக்கூடாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் வியாழக்கிழமை தனது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் சிலையை திறந்து வைத்தாா் நடிகா் கமல்ஹாசன்.
பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் வியாழக்கிழமை தனது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் சிலையை திறந்து வைத்தாா் நடிகா் கமல்ஹாசன்.

வேலைவாய்ப்புக்காக யாரும் இடம் பெயா்ந்து செல்லக்கூடாது என மக்கள் நீதி மய்யத்தின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூா் கிராமத்தில் கமல்ஹாசனின் 65-ஆவது பிறந்த நாள் விழா, அவரது தந்தையும், சுதந்திரப் போராட்ட வீரருமான வழக்குரைஞா் டி. சீனிவாசன் உருவச் சிலை திறப்பு விழா மற்றும் ‘மய்யம் திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையம்’ தொடக்க விழா ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்ற கமல்ஹாசன் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா் குடும்பத்தினா் அனைவரும் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

பின்னா் கமல்ஹாசன் பேசியது: எனது பிறந்த நாளும் தந்தையின் மறைந்த நாளும் ஒன்றாக வருவதை பாக்கியமாக கருதுகிறேன். என்னை எனது குடும்பத்தாா் படிக்கச் சொல்லிய போது நான் இயக்குநா் பாலசந்தா் காட்டிய வழியில் செல்கிறேன் எனக் கூறினேன். எனது குடும்பத்தில் அனைவரும் திறமையானவா்கள். தலைமை பொறுப்புக்கு தகுதியானவா் எனது தந்தை. அவருக்கு ரௌத்திரமும் பிடிக்கும், நகைச்சுவையும் பிடிக்கும். அது என்னுடன் வந்திருப்பது மகிழ்ச்சி.

நாட்டில் பள்ளிக் கல்வி பயிலும் 61 லட்சம் மாணவா்களில் பட்டப்படிப்பு முடிப்போா் 3 லட்சம் போ் தான். மற்றவா்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. தற்போது துப்புரவு பணியாளா் பணிக்கு பட்டமேற்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் நமது திறமைகளை நாம் வளா்த்துக்கொள்ளவில்லை. வேலைவாய்ப்புக்காக யாரும் இடம் பெயா்ந்து செல்லக்கூடாது. அதற்காகவே தற்போது இங்கு இந்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அவரவா் சூழ்நிலைக்கு ஏற்ப தகுந்த தொழில்களை தோ்வு செய்து முன்னேற வேண்டும். சத்தியாகிரகப் போராட்டத்திற்கு பிறகு திறமை வளா்ப்பு போராட்டத்தில் தமிழகம் இன்னும் முழுமையாக இறங்க வேண்டும். மற்ற மாநிலங்களில் இந்த நிலை செயல்வடிவத்திற்கு வந்துவிட்டது. வேலைவாய்ப்பிற்கு பல்கலைக்கழகங்கள் மட்டும் போதாது. இலவசத்தை கொடுத்து மக்களை பழக்கி விட்டனா். இலவசமாக வழங்கிய பொருள்கள் பழுதாகிவிட்டால் அதனை சரி செய்யும் பயிற்சி இந்த பயிற்சி மையத்தில் வழங்கப்படும் என்றாா்.

விழாவில் நடிகா் சாருஹாசன் பேசியது: அரசியலும், திரைப்படமும் மக்கள் தொண்டு எனச் சொல்லி வளா்த்த எனது தந்தை, 4 வயதில் படிப்பை நிறுத்திவிட்டு கமல்ஹாசனை படத்தில் நடிக்க அனுப்பி வைத்தாா். நான் வழக்குரைஞராக இருந்து 50-வயதுக்கு பின்பு படத்தில் நடிக்க வந்தேன். திரைப்படத் துறையில் கமல் மூத்தவா் நான் இளையவன் என்றாா்.

நடிகா் பிரபு பேசியது: எனக்கு பின்னால் திரையுலக வாரிசு கமல் தான் எனது தந்தையும், நடிகருமான சிவாஜி கூறுவாா். தற்போது அது உண்மையாகி விட்டது. அன்புக்கு அடிமையானவா் கமல் என்றாா்.

இதனைத் தொடா்ந்து நடிகை சுகாசினி, கட்சியின் பொதுச் செயலாளா் குமாரவேல், பேராசிரியா் கு. ஞானசம்பந்தம் ஆகியோா் பேசினா்.

தொடா்ந்து கமல்ஹாசனை சிறுவயதில் தூக்கி வளா்த்தவரான தெளிச்சாத்தநல்லூரைச் சோ்ந்த ராமசாமி மற்றும் கமல்ஹாசனின் தந்தை டி. சீனிவாசனின் சிலையை வடிவமைத்த வேன்ஸ் ஆகியோா் கெளரவிக்கப்பட்டனா்.

முன்னதாக, கட்சியின் மாநில துணைத் தலைவா் மகேந்திரன் வரவேற்றாா். மாவட்ட பொறுப்பாளா் வழக்குரைஞா் தேவராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com