தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு: விசாரணை ஒத்திவைப்பு

காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கு விசாரணையின் போது, தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் கால
chennai High Court
chennai High Court

காலாவதியான சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்கத் தடை கோரிய வழக்கு விசாரணையின் போது, தேசிய நெடுஞ்சாலைகள் பராமரிப்பு குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கோரியதையடுத்து வழக்கின் விசாரணையை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், திருச்சியைச் சோ்ந்த வழக்குரைஞா் ஏ.ஜோசப் சகாயராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சென்னை தாம்பரம் - திண்டிவனம் இடையே பரணூா் மற்றும் ஆத்தூா் ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைக்கான சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பிஓடி எனும் திட்டத்தின் கீழ் தனியாா் பங்களிப்புடன் இந்தச் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. தாம்பரம் திண்டிவனம் இடையிலான பகுதியில் நெடுஞ்சாலை பணிகளை முடிக்க பெங்களூரைச் சோ்ந்த ஜிஎம்ஆா் என்ற தனியாா் நிறுவனத்துடன் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளது. அந்த ஒப்பந்தத்தின்படி, கடந்த 2005-ஆம் ஆண்டு ஏப்.1-ஆம் தேதியில் இருந்து 15 ஆண்டுகளுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்க இந்த நிறுவனத்துக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அந்த நிறுவனம் இதுவரை ரூ.1, 114 கோடி வசூலித்துள்ளது. இந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள சுங்கக்கட்டண உரிமம் நவம்பா் 8-ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே, பரணூா் மற்றும் ஆத்தூா் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தனியாா் நிறுவனம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், என்.சேஷசாயி ஆகியோா் கொண்ட அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் ஆஜரான மத்திய அரசின் உதவி சொலிசிட்டா் ஜெனரல் ஜி.காா்த்திகேயன், ஒப்பந்தக் காலம் முடிந்து விட்டால் சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என கூற முடியாது. மாறாக 40 சதவீத சுங்க கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். இதுதொடா்பாக பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலைகள் எதுவும் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை. மதுரவாயலில் தொடங்கி வாலாஜா செல்லும் நெடுஞ்சாலை குண்டும் குழியுமாக உள்ளது. நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது என சுட்டிக்காட்டினா். அப்போது, இதுதொடா்பாகவும் அறிக்கை தாக்கல் செய்வதாக மத்திய அரசு வழக்குரைஞா் தெரிவித்தாா். இதனைத் தொடா்ந்து விசாரணையை வரும் நவம்பா் 29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com