அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், புதுவை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று முதல்வர் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தார்.
புதுவையில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிங்கப்பூரில் தொழிலதிபர்களை சந்தித்து பேச முதல்வர் நாராயணசாமி கடந்த 6-ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார். ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) அவர் புதுச்சேரிக்குத் திரும்புகிறார். இந்த நிலையில், நாட்டில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்தது. இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி தனது சுட்டுரைப் பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவு: அயோத்தி வழக்கில் சனிக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இரு தரப்பினரும் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தீர்மானிப்பர். புதுவை மதச்சார்பற்ற மாநிலம். அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நேரத்தில், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று புதுவை மக்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன் என பதிவிட்டுள்ளார் நாராயணசாமி.