சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் வங்க கடலில் உருவான கஜா புயல் நாகை மற்றும் வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. இந்த புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்தன.
கோடிக்கணக்கான மதிப்புடைய சொத்துக்கள் சேதமடைந்ததுடன் 40-க்கும் மேற்பட்டோரும் இந்தப் புயலில் பலியானார்கள். புயலால் இறந்தோரின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதேநேரம் மறுசீரமைப்புக்காக பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டதுடன் கணிசமான நிதியும் ஒதுக்கப்பட்டது.
இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட்ட சீரமைப்பு பணிகள் பற்றி தலைமைச் செயலர் சண்முகம் உயர் அதிகாரிகளுடன் செவ்வாயன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வருவாய் நிர்வாக ஆணையர், வேளாண்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கஜா புயல் பாதிப்புக்கு பின் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு நிவாரணப் பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.