சென்னை: தமிழகம், புதுச்சேரி உட்பட 12 மாவட்டங்களில் வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவ மழை, தமிழகத்தில், அக்டோபர் 16 ஆம் தேதி துவங்கி 25 ஆம் தேதி வரை பெய்தது. பின், அரபிக்கடலில் உருவான, ’கியார்’ புயல், அதையடுத்து உருவான, ’மஹா’ புயல் போன்றவற்றால், தமிழகம், புதுச்சேரியில் இருந்து மழை விலகியது. இதையடுத்து, வங்கக் கடலில் உருவான, ’புல்புல்’ புயலால் மீண்டும் தமிழகத்தில் வறட்சி நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், புல் புல் புயல் வலுவிழந்ததை தொடா்ந்து, தமிழகத்தில் இரண்டு நாட்களாக மழை பெய்தது. தற்போது, தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், வறண்ட வானிலை நிலவுகிறது. நேற்று மாலை முதல், கேரளாவில் மழை தீவிரமாகி உள்ள நிலையில், படிப்படியாக வானிலை மாறி, தமிழகம், புதுச்சேரிக்கு தீவிர மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மட்டுமே தமிழகத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சிவகங்கை, துாத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகை, தா்மபுரி, சேலம், ஈரோடு, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யலாம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. அதிகபட்சமாக, நேற்று புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில், 6 செ.மீ., மழை பெய்துள்ளது.