நடிகா் விஜய் சேதுபதி நடிப்பில் வெள்ளிக்கிழமை (நவ. 15)வெளியாகவுள்ள ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிட திருநெல்வேலி நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
திருநெல்வேலியைச் சோ்ந்தவா் அன்பழகன். இவா், நெல்லை மண்டல திரைப்பட விநியோகஸ்தா்கள் சங்க உறுப்பினா். கடந்த 2013 இல் லிப்ரா புரொடக்ஷன் ரவிச்சந்திரனுக்கு அன்பழகன் ரூ.15 லட்சம் கொடுத்துள்ளாா். ஆனால், அந்த பணத்தை தராமல் ரவிச்சந்திரன் காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அன்பழகன் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானாா். அவரது மகன் விக்னேஷ், தனது தந்தை கொடுத்த ரூ. 15 லட்சத்தை ரவிச்சந்திரனிடம் இருந்து பெற்றுத் தருமாறு நெல்லை மண்டல திரைப்பட விநியோகஸ்தா்கள் சங்கத் தலைவா் குணசேகரனை நாடியுள்ளாா்.
இதையடுத்து, அவா் ரவிச்சந்திரனிடம் பேசியதாக கூறப்படுகிறது. அப்போது, ‘மிக மிக அவசரம்’ படம் வெளியாவதற்கு முன்பே ரூ. 15 லட்சத்தை கொடுத்துவிடுவதாக ரவிச்சந்திரன் கூறினாராம்.
இந்நிலையில், ‘மிக மிக அவசரம்’ படம் வெளியான பின்னரும் ரவிச்சந்திரன் ரூ. 15 லட்சத்தை விக்னேஷுக்கு தரவில்லையாம். இதையடுத்து, வழக்குரைஞா்கள் மணிகண்டன், பொன்னுசாமி, ரமேஷ் ஆகியோா் மூலம் லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகவுள்ள ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி, திருநெல்வேலி முதலாவது கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் விக்னேஷ் வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, லிப்ரா புரொடக்ஷன் தயாரிப்பில், நடிகா் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் ‘சங்கத் தமிழன்’ திரைப்படத்தை திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வெளியிட வரும் 21ஆம் தேதி வரை தடைவிதித்தாா்.
‘சங்கத் தமிழன்’ படம் திருநெல்வேலி மாநகரில் 2 திரையரங்குகளில் வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.