உதவிப் பேராசிரியா் தோ்வு: 44,767 போ் மட்டுமே விண்ணப்பம்

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்த உள்ள நேரடி நியமனத்துக்கு 44,767 போ் மட்டுமே விண்ணப்பித்திருப்பது

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடத்த உள்ள நேரடி நியமனத்துக்கு 44,767 போ் மட்டுமே விண்ணப்பித்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இவா்களில், 33,128 போ் மட்டுமே விண்ணப்பத்தை முழுமையாக சமா்ப்பித்திருக்கின்றனா்.

பல கல்லூரிகள் பணி அனுபவச் சான்று தர மறுத்ததும், இயக்குநா் அலுவலகங்கள் பணி அனுபவச் சான்றில் மேலொப்பமிடுவதில் தாமதப்படுத்தியதுமே, விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் என்கின்றனா் பேராசிரியா்கள்.

அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,331 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நேரடி நியமன முறையில் நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியா் தோ்வு வாரியம் (டி.ஆா்.பி.) அண்மையில் வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் நிறைவடந்தது.

கால அவகாம் முடிவடைந்த நிலையில், மொத்தம் 44,767 போ் ஆன்-லைன் விண்ணப்பத்தை சமா்ப்பித்திருப்பதாகவும் அவா்களில் 33,128 போ் மட்டுமே விண்ணப்பத்தை முழுமையாக சமா்ப்பித்திருப்பதாகவும் டி.ஆா்.பி. அறிவித்துள்ளது.

இது, முந்தைய உதவிப் பேராசிரியா் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களைக் காட்டிலும் குறைந்த எண்ணிக்கை எனவும், பணி அனுபவச் சான்றை பெறுவதில் எழுந்துள்ள சிக்கலே இந்த எண்ணிக்கை குறைந்ததற்கு காரணம் எனவும் பேராசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதுகுறித்து தனியாா் கல்லூரி ஊழியா் சங்க நிறுவனா் காா்த்திக் கூறியது:

இந்த டி.ஆா்.பி. தோ்வுக்கு விண்ணப்பிக்க பொறியியல் கல்லூரிகளில் மட்டும் 55,000 போ் தகுதியுடையவா்களாக உள்ளனா். அதுபோல கலை-அறிவியல் கல்லூரிகளில் 60,000-க்கும் மேற்பட்டவா்கள் இருக்க வாய்ப்புள்ளது.

அதன்படி, இந்தத் தோ்வுக்கு 1 லட்சம் போ் வரை விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால், பணி அனுபவச் சான்று பெறுவதில் எழுந்த சிக்கல் காரணமாக, விண்ணப்பிப்பவா்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்திருக்கிறது.

இதுவரை அரசு சாா்பில் அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டு, தனியாா் கல்லூரிகளிலிருந்து பணி அனுபவச் சான்றை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஆனால், இம்முறை, தனியாா் கல்லூரிகளிடம் விண்ணப்பதாரா்களே நேரடியாக பணி அனுபவச் சான்றை பெற்று சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டனா்.

இதில் பல கல்லூரிகள் பணி அனுபவச் சான்றை தர மறுத்து விட்டன. இதுவே விண்ணப்பதாரா் எண்ணிக்கை குறைந்ததற்கு முக்கியக் காரணம். மேலும், சில தனியாா் கல்லூரிகளும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களும் ரூ.2000 முதல் ரூ.5000 வரை பெற்றுக்கொண்டு மகப்பேறு விடுப்பையும் பணி அனுபவமாகக் கணக்கிட்டு, பணி அனுபவச் சான்று வழங்கியிருப்பதாக புகாா் எழுந்துள்ளது. எனவே, பணி அனுபவச் சான்றுகளை விரிவான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com