நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை (திங்கள்கிழமை) தொடங்கவுள்ள நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற கதிர் ஆனந்த் நாளை எம்பியாக பதவியேற்க உள்ளார்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நாளை தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை 20 அமர்வுகளாக நடைபெறவுள்ளது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-வது மக்களவையின் 2-வது கூட்டத்தொடராகும்.
இந்நிலையில், வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் நாளை மக்களவையில் எம்பி.,யாக பதவியேற்க உள்ளார். இவர் தவிர பிகார் மாநிலம் சமஸ்திபூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிரின்ஸ் ராஜ், மத்தியப் பிரதேச மாநிலம் ஷாடோல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹிமாத்ரி சிங் மற்றும் மகாராஷ்ரிட மாநிலம் சதாரா மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஸ்ரீனிவாஸ் தாதாசாகேப் பாட்டீல் ஆகியோரும் நாளை பதவியேற்க உள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினராக கதிர் ஆனந்த் பதவியேற்பதன் மூலம், மக்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 24 ஆக உயரவுள்ளது.