'குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்?': சேலம் விழாவில் ஸ்டாலின் கொடுத்த விளக்கம்

திமுகவில் குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்? என்று  சேலத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
சேலம் விழாவில் ஸ்டாலின்
சேலம் விழாவில் ஸ்டாலின்

சேலம்: திமுகவில் குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால்? என்று  சேலத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று (17-11-2019) காலை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் சேலத்தில் நடைபெற்ற, மறைந்த  வீரபாண்டி ஆறுமுகத்தின் ‘திராவிட இயக்கத்தில் என் பயணம்’ என்ற வாழ்க்கை வரலாற்று நூலினை வெளியிட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

மற்ற மாவட்டங்கள் எல்லாம் அரசாங்கம் சூட்டிய பெயரால் வழங்கி வரும்போது சேலம் மட்டும் “வீரபாண்டியார் மாவட்டம்” என்று சொல்லக்கூடிய அளவுக்கு இந்த மாவட்டத்தையே தன்னுடைய கைக்குள் வைத்திருந்தவர் அண்ணன் வீரபாண்டியார் அவர்கள். அவர்கள் எழுதிய ‘திராவிட இயக்க வரலாற்றில் என் பயணம்’ என்ற நூல் இன்றைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கிற வீரபாண்டி ராஜா அவர்கள் குறிப்பிட்டதைப் போல அண்ணன் வீரபாண்டியார் இருக்கும்போதே இந்நூல் வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அவர் நம்மை விட்டு பிரிந்த பிறகு இந்நூல் வெளிவருவது உண்மையில் வருத்தம் தருவதாக உள்ளது.

இந்நூலை வாசிக்கின்றபோது அந்த வருத்தம் விலகி, மகிழ்ச்சியும் பெருமையும் பூரிப்பும் புளங்காகித உணர்வும், ஏன், நம்மையே அறியாமல் ஒரு வீரமும் வந்து கொண்டிருக்கிறது. பெருமையும் அடைந்தேன். வீரபாண்டியார் அவர்கள் எத்தகைய தியாகத்தைச் செய்துள்ளார் என்பது பெருமைக்குரியதாக இருந்தது. அத்தகைய வீரபாண்டியாரை, கழகம் உயரத்தில் வைத்து அழகு பார்த்தது என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

வீரபாண்டியாரைப் பொறுத்த வரையில் அவரது பயணம் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தோடு தடம் மாறாமல் இருந்த பயணம் ஆகும்.

1956ஆம் ஆண்டு பூலாவரி கிராமத்தில் கிளைக்கழகம் தொடங்கியது முதல் 2013ஆம் ஆண்டு மறைகின்ற வரை ஒரே இயக்கம், ஒரே கொடி, ஒரே சின்னம் என்று இலட்சியத்தோடு வாழ்ந்தார்.

இந்தப் புத்தகம் 400 பக்கங்களுக்கு மேல் கொண்ட மிகப் பெரிய புத்தகம். இதனை முழுமையாக என்னால் சொல்ல இயலாது. நீங்கள் அனைவரும் வாங்கிப் படித்தால்தான் வீரபாண்டியாரின் தியாகத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைக்கு மிகப் பெரிய சர்ச்சையாகிக் கொண்டு இருக்கிறது மிசா. நான் மிசாவில் இருந்தேனா இல்லையா என்பது இந்த நாட்டில் விவாதம் ஆகிக் கொண்டு இருக்கிறது. எதை விவாதிப்பது என்ற விவஸ்தையே இந்த நாட்டில் இல்லை. நான் சிறையில் இருந்தேனா இல்லையா என்பது விவாதிக்க வேண்டிய தலைப்பா?

அதனால்தான் பொதுக்குழுவிலே சொன்னேன். மிசாவில் இருந்தேன் என்று சொல்லிக் கொள்வதற்கே எனக்கு வெட்கமாக இருக்கிறது என்று சொன்னேன். இதனை எதற்காகச் சொல்கிறேன் என்றால் நான மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டோம்.

நாங்கள் சென்னை சிறையில் இருந்தோம் என்றால் வீரபாண்டியார் அவர்கள் சேலம் சிறையிலும், பின்னர் மாற்றலாகி மதுரை சிறையிலும் இருந்துள்ளார்கள்.

1975ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல் படுத்தப்பட்டது. நாட்டில் உள்ள பல தலைவர்கள் காராக்கிரகத்தில் அடைக்கப்பட்டார்கள். அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து முதல் முதலில் குரல் கொடுத்த இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். தலைவர் கலைஞர் அவர்கள் தான் முதன் முதலில் எதிர்த்து குரல் கொடுத்தார்.

டெல்லியில் இருந்து சில தூதுவர்கள் வந்தார்கள். “அன்னை இந்திரா காந்தி கொண்டுவந்திருக்கும் நெருக்கடி நிலையை நீங்கள் எதிர்க்கக் கூடாது, ஆதரிக்க வேண்டும் என்று அவசியமில்லை; ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் ஆதரித்தால் மகிழ்ச்சி; ஆதரிக்கவில்லை என்று நாங்கள் கவலைப்படமாட்டோம். ஆனால், எதிர்க்கக்கூடாது. நீங்கள் எதிர்க்காமல் இருந்தால் உங்கள் ஆட்சி தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்கும். நீங்கள் எதிர்த்தால், உங்கள் ஆட்சியை  அடுத்த விநாடியே  கவிழ்த்துவிடுவோம்.” என்று வந்த தூதுவர்கள் சொன்னார்கள்.

அவர்களிடத்தில், " தந்தை பெரியார் அவர்களால், பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களால் வளர்க்கப்பட்டவன் நான். ஆட்சியென்ன? எங்கள் உயிரே போனாலும் நாங்கள் என்றைக்கும் சர்வாதிகாரத்திற்கு துணை நிற்கமாட்டோம் – ஜனநாயகத்தின் பக்கம்தான் நிற்போம்" என்று தலைவர் கலைஞர் அவர்கள் வந்த தூதுவர்களிடத்தில் சொல்லி அனுப்பினார்.

அதற்குப்பிறகு, சென்னை கடற்கரையில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். அம்மையார் இந்திரா காந்தி அவர்களே நீங்கள் கொண்டு வந்திருக்கும் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். கைது செய்து சிறை வைத்திருக்கும் தலைவர்களையெல்லாம் உடனடியாக விடுதலை செய்திட வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தீர்மானத்தை முன்மொழிகிறேன் என்று படித்துவிட்டு, வந்திருந்த மக்கள் அனைவரையும் எழுந்து நிற்க வைத்து வழிமொழிய வைத்தார்.

அதனையடுத்து, 1976ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் திராவிட முன்னேற்றக் கழக அரசு கலைக்கப்படுகிறது. கழகத்தைச் சேர்ந்த எங்களைப் போன்ற பலரும் கைது செய்யப்படுகிறார்கள். நான் பிப்ரவரி 2ஆம் தேதி கைது செய்யப்படுகிறேன். தமிழகம் முழுவதும் நம்முடைய தோழர்கள் பல்வேறு மத்தியச் சிறைகளில் அடைக்கப் படுகிறார்கள்.

பிப்ரவரி மாதம் 6ஆம் நாள் தனது மூத்த மகள் மகேஸ்வரி - காசி ஆகியோர் திருமணத்தை தலைவர் கலைஞர் அவர்கள் நடத்தி வைக்க வேண்டும். அதற்குள் ஆட்சி கலைக்கப்பட்டு நாங்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுவிட்டோம்.

இந்த நிலையில் வீரபாண்டியாரை அழைத்து கலைஞர் சொல்கிறார். இந்த திருமணத்தை நான் நடத்தி வைக்க வந்தால், உடனே உன்னைக் கைது செய்து விடுவார்கள். அதனால் முன்னணியினரை வைத்து நீயே நடத்தி விடு என்று தலைவர் சொல்கிறார். இதனை ஏற்றுக் கொள்ளக்கூடியவரா வீரபாண்டியார்? எது நடந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வந்து தான் நடத்த வேண்டும் என்கிறார் வீரபாண்டியார்.

ஆனால் ஒரு சுப நிகழ்ச்சி நடைபெறும்போது தன்னால் எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதால் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.

திருமணம் முடிந்ததும் மணமக்கள் சொந்த ஊருக்கு மறுவீட்டுக்குச் செல்வதற்கு முன்னால் வழிமறிக்கப்பட்டு, வீரபாண்டியார் கைது செய்யப்பட்ட காட்சி கண்ணீரை வரவழைக்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கலைஞரின் தளபதி என்பதற்காக வீரபாண்டியார் கைது செய்யப்படுகிறார். அரசியல் கைதியாக, ஆனால் அதற்காக அவரது குடும்பத்தினர் அனுபவித்த சித்ரவதைகள் சொல்லி மாளாதவை!

மதுரைச் சிறையில் இருந்து சேலம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த வீரபாண்டியாரை கையில் விலங்கு போட்டு ரயில் கம்பியில் பிணைத்து, உட்கார வைத்து அழைத்து வந்தார்கள்.

குடும்ப அரசியல் ஏன் செய்கிறார்கள் என்றால், குடும்பம் குடும்பமாக இக்கட்சிக்கு உழைத்தார்கள். குடும்பம் குடும்பமாக பாடுபட்டார்கள். குடும்பம் குடும்பமாக சிறைக்கு சென்றார்கள்!

வன்னியர் சமுதாயத்திற்காக இடஒதுக்கீடு வழங்குவதில் தலைவர் கலைஞர் காட்டிய உறுதியும் அதற்காக வீரபாண்டியார் எடுத்த முயற்சியும் விரிவாக எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.

கழகத்தின் கொடிக்கும் சின்னத்துக்கும் சோதனை வந்து தீர்ப்பு தேதி அன்று காலையில் கலைஞர் என்ன சொன்னார் என்று வீரபாண்டியார் எழுதியதை படிக்கும்போது உடம்பு சிலிர்க்கிறது.

முகச்சவரம் செய்யாமல் இருந்துள்ளார் கலைஞர். வீரபாண்டியாரைப் பார்த்ததும், சின்னமும் கொடியும் நம் கையை விட்டுப் போனால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை. தற்கொலை செய்து கொள்வேன் என்று கலைஞர் அழுதுள்ளார். அன்று காலை உணவு சாப்பிடவில்லை தலைவர். சின்னமும், கொடியும் நமக்குத்தான் என்று தீர்ப்பு வந்ததும், சிறுகுழந்தையைப் போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தாராம் தலைவர்.

இதனைப் படிக்கும்போது கழகத்தின் முன்னணி வீரர்கள் 100 பேர் இதுபோன்ற வரலாற்றை எழுதினால் அதுதான் திமுக வரலாறு! என்பது திண்ணமாகிறது.

அதனால்தான் வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கிடைத்த ஊமைத்துரையைப் போல எனக்குக் கிடைத்த தம்பி வீரபாண்டி ஆறுமுகம் என்று சொன்னார் கலைஞர் அவர்கள். வீரபாண்டியாரைப் போல ஏராளமான வீரபாண்டியார்கள் தமிழகம் முழுவதும் உருவாக வேண்டும். அப்படி உருவாக்குவதற்கான பாடப்புத்தகமாக இந்நூல் அமைந்துள்ளது.

நம்முடைய பொதுக்குழுவில் ஏகமனதாக நிறைவேற்றி இருக்கிறோம். அவற்றை விளக்கிச் சொல்லும் வகையில் நேற்று முதல் ‘கழகப் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டங்களை’ தமிழகம் முழுவதும் நடத்த தொடங்கியிருக்கிறோம். அது தொடரப் போகிறது!

இன்று தமிழகத்தில் இருக்கும் அநியாய ஆட்சியை விரட்டுகிற வரையில் அந்தப் போராட்டத்தை நாம் தொடருவோம்! அது அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மீது நாம் எடுக்கின்ற உறுதியாக சபதமாக இருக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டு வாய்ப்புக்கு நன்றி சொல்லி விடைபெறுகிறேன். வணக்கம்.

இவ்வாறு அவர் உரையாற்றினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com