சிவகங்கை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவுத் துறை மூலம் பயிர்க் கடன் வழங்குவதற்காக நடப்பாண்டில் ரூ. 10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே. ராஜு தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 66}ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சர் செல்லூர் கே. ராஜு பேசியது:
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நலிவடைந்த நிலையில் இருந்த கூட்டுறவு சங்கங்களை அதிமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் புனரமைத்ததுடன், அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் கிராமப்புறங்களில் ஏழை, எளியோர் பயனடைந்தனர். இதன்காரணமாக, தமிழக கூட்டுறவுத் துறைக்கு கடந்த 8 ஆண்டுகளில் மத்திய அரசு சார்பில் 27 விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
தமிழகம் கூட்டுறவுத்துறை மட்டுமின்றி கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பிற துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கடந்த 2011}ஆம் ஆண்டு அதிமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள 87 லட்சத்து 89 ஆயிரத்து 930 விவசாயிகளுக்கு ரூ. 46 ஆயிரத்து 350 கோடி மதிப்பிலான வட்டியில்லா பயிர்க் கடன் கூட்டுறவுத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்குவதற்காக ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் 2019 அக்டோபர் 31}ஆம் தேதி வரை 6 லட்சத்து 81ஆயிரத்து 308 விவசாயிகளுக்கு இதுவரை ரூ. 4,560 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் மீதமுள்ள தொகையும் விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக வழங்கப்படும் என்றார்.
விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க. பாஸ்கரன் முன்னிலை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். நாகராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் து. ஆரோக்கியசுகுமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப் பதிவாளர் ஜெ.பழனீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.